search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விதிகளை மீறிய பிரதமர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?: காங்கிரஸ் கேள்வி
    X

    விதிகளை மீறிய பிரதமர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?: காங்கிரஸ் கேள்வி

    • பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டம் 5 ஆண்டுக்கு நீடிக்கப்படுகிறது என பிரதமர் மோடி அறிவித்தார்.
    • பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல் என காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

    புதுடெல்லி:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 80 கோடி ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் திட்டமான பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தை 5 ஆண்டுக்கு அரசு நீட்டிக்கும் என்று அறிவித்தார்.

    5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல் என காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

    இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிடுகையில், பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்ட நீட்டிப்புக்கு மத்திய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் அளிக்கவே இல்லை. ஆனால் அதற்கு முன்னதாகவே பொதுவெளியில் மோடி அறிவித்துவிட்டார். மோடி எப்படி செயல்படுவார் என்பதற்கு இது ஓர் உதாரணம். பா.ஜ.க. அரசில் மத்திய அமைச்சரவைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. முதலில் மோடி அறிவித்து விடுவார். பிறகு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

    பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமீறலும் கூட. எனவே தேர்தல் ஆணையம் இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்குமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Next Story
    ×