என் மலர்
இந்தியா

பிப்ரவரி 26-இல் இந்தியா வருகிறார் கனடா பிரதமர் மார்க் கார்னி
- மும்பையில் தரையிறங்கும் அவர், அங்கு இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களை சந்திப்பார்.
- மார்க் கார்னி பிரதமராக இந்தியா வரும் முதல் பயணம் இது.
கனடா பிரதமர் மார்க் கார்னி பிப்ரவரி 26 முதல் மார்ச் 7 வரை இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
முதற்கட்டமாக பிப்ரவரி 26 அன்று அவர் இந்தியா வருகை தர உள்ளார். அன்றைய தினம் முதலில் மும்பையில் தரையிறங்கும் அவர், அங்கு இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களைச் சந்தித்து முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்துவார்.
அங்கிருந்து டெல்லி செல்லும் அவர், பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மார்க் கார்னி பிரதமராக இந்தியா வரும் முதல் பயணம் இது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் சமீபகாலமாக நிலவிய கசப்பான சூழலைச் சரிசெய்து, உறவை மீண்டும் வலுப்படுத்துவதே இந்த வருகையின் முக்கிய நோக்கமாகும்.
பொருளாதார உறவு, எரிசக்தி மற்றும் யுரேனியம் விநியோகம், செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகிய துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்பு பற்றி அவர்கள் விவாதிப்பார்கள் என கூறப்படுகிறது.
இந்தியப் பயணத்திற்குப் பிறகு, மார்க் கார்னி ஆஸ்திரேலியா சென்று அந்நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பனீஸைச் சந்திக்கவுள்ளார்.






