பாட்டிக்கு நாற்காலி வழங்காததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்

டெல்லியில் இருந்து இரவு 8 மணி அளவில் மணமகன் குடும்பத்தினர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.மணமகனும் அவரது குடும்பத்தினரும் குழப்பம் அடைந்தனர்.
பாட்டிக்கு நாற்காலி வழங்காததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்
Published on

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், டெல்லி சீமாபுரி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இவர்களது திருமணம் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற இருந்த நிலையில் மணமகள் வீட்டார் அதற்கான ஏற்பாடுகளை தடபுடலாக செய்திருந்தனர்.

அதன்படி டெல்லியில் இருந்து இரவு 8 மணி அளவில் மணமகன் குடும்பத்தினர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில் மணமகனின் வயதான பாட்டி உட்காருவதற்காக ஒரு நாற்காலி கேட்டுள்ளார். ஆனால் மணமகளின் உறவினர்கள் அவருக்கு நாற்காலி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதுபற்றி பாட்டி மணமகனிடம் முறையிட்டுள்ளார். இதனால் இந்த விவகாரம் பெரிதாகியது. இதையடுத்து மணமகனும் அவரது குடும்பத்தினரும் குழப்பம் அடைந்தனர்.

அவர்கள் மணமகளிடம் சென்று நீ எங்களுடன் வீட்டுக்கு வந்தால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் மேலும் அதிகரித்தது.

இதைத்தொடர்ந்து திருமணத்தை நிறுத்துவதாக மணமகன் அறிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. திருமண வரவேற்புக்காக தாங்கள் செலவழித்த தொகையை தந்த பின்னரே இடத்தை விட்டு போகுமாறு மணமகனின் குடும்பத்தினரிடம் மணமகள் வீட்டார் கூறினர்.

அதன்படி மணமகன் குடும்பத்தினர் நஷ்டஈடு தொகையை கொடுக்க ஒப்புக்கொண்டனர். அதன் பிறகு மணமகன் வீட்டார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக எங்களுக்கு எந்த ஒரு புகாரும் வரவில்லை என அப்பகுதியை சேர்ந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு அனுக்ரிதிசர்மா கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com