என் மலர்
இந்தியா

திருமண ஊர்வல அலங்கரிப்பில் மாப்பிள்ளை யார்?- பா.ஜனதா கிண்டல்
- பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்
- பிரதமர் வேட்பாளர் யார்? என்பதில்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது
பாராளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. இதில் பா.ஜனதாவை எப்படியாவது தோற்கடித்தாக வேண்டும் என எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. ஆனால், அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க முடியுமா? இந்த வேலையை செய்வது யார்? என்பது மில்லியன் கேள்வி. அப்படி ஒருங்கிணைத்தாலும் பிரதமர் வேட்பாளர் யார்? என்பது பில்லியன் கேள்வி.
இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்ககும் முதற்படியாக நிதிஷ் குமார் பீகாரில் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். 18-க்கும் மேற்பட்ட கட்சித்தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் 2024 பாராளுமன்ற தேர்தலை ஒற்றுமையாக எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.
கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர்கள் புறப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பா.ஜனதா எம்.பி., ரவி சங்கர் பிரசாத் நிதிஷ் குமார் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தை கிண்டல் செய்துள்ளார்.
ரவி சங்கர் பிரசாத் இதுகுறித்து கூறும்போது ''நிதிஷ் குமார் பாட்னாவில் 2024-ம் ஆண்டுக்கான தேர்தல் திருமண ஊர்வலத்தை அலங்கரித்து கொண்டிருக்கிறார். ஆனால், யார் மணமகன் (பிரதம வேட்பாளர்). ஒவ்வொருவரும் தங்களை பிரதம வேட்பாளர் என அழைத்து வருகிறார்கள்'' என்றார்.






