

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் என்ற இடத்தில் சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பத்ரிநாத் கோவிலுக்கு சென்ற சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் 12 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் நடந்த சாலை விபத்து குறித்து சோகமான செய்தி கிடைத்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். உள்ளூர் நிர்வாகம் மற்றும் SDRF குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.
இதனிடையே, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, ருத்ரபிரயாக் சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்த பயணிகள் விமானம் மூலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.