search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஏர் இந்தியா விமான பணிப்பெண்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
    X

    ஏர் இந்தியா விமான பணிப்பெண்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

    • காதுகளில் முத்து காதணிகள் அணிந்து வரக்கூடாது.
    • மதக்கயிறுகள் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மும்பை

    ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன்னர் தொழில் அதிபர் ஜே.ஆர்.டி. டாடாவால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக இயங்கியது. பெரும் நஷ்டத்தை சந்தித்த நிலையில், இந்த நிறுவனத்தை டாடா நிறுவனம் மீண்டும் வாங்கியது. அது முதல் இந்த நிறுவனத்தை லாபகரமாக மாற்ற ஏதுவாக பல மாற்றங்களை செய்து வருகிறது.

    தனது விமானத்தில் பணியாற்றும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தோற்றப்பொலிவைத் தருகிற வகையில் தோற்றத்தில், ஆடை, அணிகலன்களில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

    இந்த மாற்றங்கள் பற்றிய முழு விவரம் வருமாறு:-

    ஆண் ஊழியர்களுக்கு...

    * தலையில் கண்டிப்பாக ஹேர் ஜெல் தடவி இருக்க வேண்டும்.

    * தலையில் திட்டுத்திட்டாக வழுக்கை இருந்தால் முழுமையாக தினமும் ஷேவ் செய்து கொள்ள வேண்டும்.

    * தலைக்கு 'டை' அடிக்கிற வழக்கம் உள்ளவர்கள் இயல்பான நிறச்சாயத்தைப் பயன்படுத்த வேண்டும்.

    * மணிக்கட்டுகளில், கழுத்தில், கணுக்காலில் மத வழக்கப்படியான கயிறுகளை அணியக்கூடாது.

    விமான பணிப்பெண்கள் கீழ்க்காணும் விதி முறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    * காதுகளில் முத்து காதணிகள் அணிந்து வரக்கூடாது. சாதாரணமான தங்கம் அல்லது வைர காதணிகளை அணியலாம்.

    * தலைமுடி அலங்காரத்தைப் பொறுத்தமட்டில் குறைந்த அளவிலான (லோ பன்) கொண்டை கூடாது.

    * ஐ ஷேடோ, லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ் மற்றும் ஹேர் ஷேட் கார்டுகளை கண்டிப்பாக பயன்படுத்தி வர வேண்டும்.

    * ஒற்றை வளையல் அணிந்து கொள்ளலாம். அதில் கற்கள் பதிக்கப்பட்டிருக்கலாம்.

    * மோதிரம் இரு கைகளிலுமே ஒரு செ.மீ. அகலத்துக்கு மேல் இருக்கக்கூடாது.

    * மணிக்கட்டு, கழுத்து, கணுக்காலில் மத வழக்கப்படி கயிறு கட்டக்கூடாது.

    * விமானத்தில் பணியாற்றுகிற விமான பணிப்பெண்கள் புடவைகள் அணியலாம். மேற்கத்திய ஆடைகள் அணியலாம். ஆனால் இரண்டும் மெல்லிய, தோல் நிறத்தில் இருக்க வேண்டும். நீளமான காலுறைகளுடன் அணிய வேண்டும்.

    * அரை செ.மீ. விட்டத்தில்தான் பொட்டு வைக்க வேண்டும்.

    பணியில் இல்லாதபோது, சீருடை அணியக்கூடாது. அதையொட்டிய பிற அணிகலன்களும் அணியக்கூடாது.

    சிப்பந்திகள் பொது இடத்தில் ஷாப்பிங் பை அல்லது பிளாஸ்டிக் பை எடுத்துச்செல்லக்கூடாது.

    இவ்வாறு ஏர் இந்தியா கூறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Next Story
    ×