உ.பியில் சமூக ஆர்வலர் அஃப்ரீன் பாத்திமாவின் வீடு இடிப்பு- போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்

நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களின் வீடுகளை உ.பி அரசு புல்டோசர்கள் மூலம் இடித்து வருகிறது.தமது குடும்பத்தினரை வாரண்ட் இல்லாமல் காவல்துறை தடுத்து வைத்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆஃப்ரின் பாத்திமா
ஆஃப்ரின் பாத்திமா
Published on

லக்னோ:

கடந்த சில நாட்களுக்கு முன் நபிகள் நாயகம் பற்றி பா.ஜ.க செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு இஸ்லாமிய நாடுகள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் அவர்களை கைது செய்யக் கோரி நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கடந்த வெள்ளிக்கிழமை உத்தரப்பிரதேசத்தில் உள்ள மொரதாபாத், பிரக்யாராஜ் ஆகிய இடங்களில் முஸ்லீம்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற 300 பேரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுமட்டுமில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களின் வீடுகளை உ.பி அரசு புல்டோசர்கள் மூலம் இடித்து வருகிறது. இதில் முஸ்லீம்களின் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய ஜாவேத் முஹமது என்ற நபரின் வீடு புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளப்பட்டது. இவரது வீடு பிரக்யா ராஜின் கரேலி பகுதியில் அமைந்துள்ள ஜேகே ஆஷியானா காலனியில் அமைந்திருந்தது.

இதையடுத்து ஜாவேத்தின் மகளும் சமூக ஆர்வலருமான அஃப்ரீன் பாத்திமா, தமது குடும்பத்தினரை வாரண்ட் இல்லாமல் காவல்துறை தடுத்து வைத்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவியும், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவியும் ஆவார். பல்வேறு போராட்டங்களில் மாணவர்களை ஒன்றிணைந்து, தலைமை தாங்கியுள்ளார்.

இதையடுத்து ஆஃப்ரீன் பாத்திமாவுக்கு ஆதரவாக ஜே.என்.யூ வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்துடன் #istandwithafreenfathima என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்ட் ஆகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com