search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரபேல் போர் விமானம் (கோப்பு படம்)
    X
    ரபேல் போர் விமானம் (கோப்பு படம்)

    பிரான்ஸ் நாட்டில் இருந்து கடைசி கட்டமாக 3 ரபேல் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வருகிறது

    பிரான்ஸ் நாட்டில் இருந்து கடைசி கட்டமாக 3 ரபேல் போர் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வருகிறது. இதை விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.56 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் அரசுடன் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது.

    இந்த ஒப்பந்தத்தின்படி முதல் கட்டமாக 10 ரபேல் விமானங்கள் தயாராக இருந்த நிலையில் அதில் 5 விமானங்கள் 2020-ம் ஆண்டு ஜூலை 29-ந் தேதி இந்தியா வந்தன. அவை முறைப்படி இந்திய விமானப் படையில் செப்டம்பர் 10-ந் தேதி இணைக்கப்பட்டன.

    2-வது கட்டத்தில் 3 ரபேல் போர் விமானங்கள் வந்தன. அவை மேற்கு வங்காளத்தில் உள்ள அசிமாரா தளத்தில் செயல்படுத்தப்பட்டது. அதன் பிறகு தொடர்ச்சியாக பல கட்டங்களாக போர் விமானங்கள் வந்தன.

    முன்னதாக 2019 அக்டோபரில் ஜெட் விமானங்கள் பிரான்சில் ஒப்படைக்கப்பட்டன. அங்கு இந்திய விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டன.

    இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் இருந்து கடைசி கட்டமாக 3 ரபேல் போர் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வருகிறது. இதை விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதற்கு முந்தைய நிகழ்வுகளை போல இந்த விமானங்கள் பயணத்தின் போது எரிபொருள் நிரப்பப்பட்டு பிரான்சில் இருந்து நேரடியாக வரும்.

    ரபேல் போர் விமானங்கள் அதிநவீனத்துடன் பல்வேறு அம்சங்களை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆயுதம் தயாரிப்பு நிறுவனமான மீட்டோர் நிறுவனத்தின் சிறப்பு அம்சங்களான வானில் இருந்து இலக்கை குறிவைத்து தாக்குதல். ஏவுகணையை இடைமறித்து தாக்குதல் போன்ற அதிநவீன அம்சங்கள் உள்ளன.

    இந்த விமானத்தில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 3,700 கி.மீ. தூரத்திற்கு செல்லும் திறன் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 2,223 கி.மீட்டர் வேகத்தில் பறக்கும் வல்லமை பெற்றது. எதிரிகளை அடையாளம் காண்பதற்கான ரேடார் எச்சரிக்கை கருவியும் ரபேல் போர் விமானத்தில் உள்ளது.

    Next Story
    ×