search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒமைக்ரான் வைரஸ்
    X
    ஒமைக்ரான் வைரஸ்

    ஒமைக்ரானின் ஒரே பொதுவான அறிகுறி இதுதான்- நிபுணர்கள் கணிப்பு

    ஒமைக்ரான் வைரஸ் நுரையீரலை பாதிக்கும் வேகம் மிக மிக குறைவாக இருப்பதாக ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன. இது மருத்துவ உலகை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.
    ஒமைக்ரான் வைரஸ் உருமாற்றம் சர்வதேச அளவில் அனைத்து நாட்டு மருத்துவ நிபுணர்களுக்கும் புரியாத புதிராகவே இருந்து கொண்டு இருக்கிறது.

    தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் இந்த வைரஸ் பரவல் கண்டுப்பிடிக்கப்பட்ட போது உலகம் முழுவதையும் இது மீண்டும் முடக்கி விடும் என்று நிபுணர்கள் பயப்பட்டனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம், இதற்கு முந்தைய கொரோனா உருமாற்ற வைரஸ்களை விட ஒமைக்ரான் மிக வேகமாக பரவியதுதான்.

    ஆனால் அது வேகமாக பரவினாலும், அதன் சீற்றம் குறைவாகவே இருக்கிறது. இது அதிகரிக்குமா அல்லது அப்படியேதான் இருக்குமா என்பதில்தான் நிபுணர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. அடுத்த மாதம் ஒமைக்ரான் மிகப்பெரிய தாக்குதலை ஏற்படுத்தும் என்று சில நிபுணர்கள் சொல்கிறார்கள்.

    ஆனால் சில நிபுணர்கள் ஒமைக்ரானை கண்டு பயப்பட வேண்டியதில்லை. அது சாதாரண உருமாற்றம்தான் என்கிறார்கள். அதற்கு அவர்கள் சில காரணங்களையும் பட்டியலிட்டு உள்ளனர்.

    அதில் முதன்மையாக இருப்பது ஒமைக்ரான் வைரஸ். இதுவரை மிகப்பெரிய அறிகுறிகள் எதையும் வெளிப்படுத்தவே இல்லை. கொரோனாவின் தொடக்க கால வைரஸ்களான காமா, பீட்டா, டெல்டா வைரஸ்கள் காய்ச்சல், உடல்வலி, தலைவலி, கடுமையான சோர்வு போன்ற அறிகுறிகளை காட்டின.

    ஆனால் ஒமைக்ரான் வைரஸ் இப்படி அறிகுறிகளை அதிக அளவு காட்டவில்லை. இதுதான் மருத்துவ நிபுணர்களை மேலும் ஆய்வுக்கு தூண்டி உள்ளது.

    ஒமைக்ரானின் பொதுவான அறிகுறி என்ன என்று பெரும்பாலான நாடுகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில் ஒட்டுமொத்தமாக இன்று ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளது.

    அந்த முடிவை உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி ஒமைக்ரான் வைரசின் பொதுவான ஒரு அறிகுறி என்று தொண்டை பாதிப்பை வரையறுத்து உள்ளனர்.

    ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தொண்டை வறட்சி பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 90 சதவீதம் பேருக்கு உடல்வலி இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த இரண்டும்தான் ஒமைக்ரானின் ஆரம்ப கால அறிகுறி என்று அறிவித்து உள்ளனர்.

    சிலருக்கு காய்ச்சல் இருப்பதும் அறிகுறியாக கருதப்படுகிறது. ஆனால் ஒமைக்ரான் பாதித்த பெரும்பாலானவர்கள் காய்ச்சல், உடல்வலி போன்ற அறிகுறி இல்லாமலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஒமைக்ரான் தொடர்பான அடுத்தக்கட்ட ஆய்வுகள் மூலம் அது டெல்டாவை விட வேகமாக பரவினாலும் டெல்டா போன்று மிகப்பெரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தாது என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். ஒமைக்ரான் ரொம்ப ரொம்ப சாதாரண வைரஸ். அதன் தாக்குதல் விளைவுகள் தொடர்ந்து குறைவாகவே இருக்கும் என்று கருதுகிறார்கள்.

    டெல்டா வைரஸ் மற்றும் டெல்டா பிளஸ் வைரஸ் ஆகிய இரண்டும் நுரையீரலை நேரடியாக சென்று தாக்கின. நுரையீரலை மிக குறுகிய காலத்திற்குள் செயல்பட முடியாத அளவுக்கு பாதிப்பை டெல்டா வைரஸ்களால் ஏற்படுத்த முடிந்தது.

    ஆனால் ஒமைக்ரான் வைரஸ் நுரையீரலை பாதிக்கும் வேகம் மிக மிக குறைவாக இருப்பதாக ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன. இது மருத்துவ உலகை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.

    இந்தியாவில் ஒமைக்ரான் வைரசை மிக எளிதாக கையாள முடியும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். சர்வதேச அளவில் ஒமைக்ரானை கையாள்வதில் இந்தியா மற்ற நாடுகளை விட திறன்பட இருப்பதாக துணை அறிவியல் கல்வி ஆராய்ச்சி கழக பேராசிரியர் சசிதரா தெரிவித்து உள்ளார்.

    அவர் கூறுகையில், “டெல்டா வைரஸ்கள் இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உருவானது. அது உருவான வேகத்திலேயே நாடு முழுக்க மிக வேகமாக பரவியது. ஆனால் டெல்டா வைரஸ் என்ற புதிய வைரஸ் தோன்றி பரவி இருப்பதே நாம் 3 மாதங்கள் கழித்துதான் கண்டுபிடித்தோம்.

    அதாவது பிப்ரவரி மாதம் மத்தியில்தான் டெல்டா வைரஸ் ஆட்கொல்லி வைரஸ் போல மிக கடுமையாக பரவி வரும் அபாயத்தை அறிந்து செயல்பட்டோம். அதற்குள் அது தனது கோர முகத்தை காட்டி விட்டது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தது.

    கடுமையாக போராடித்தான் டெல்டாவை நாம் கட்டுப்படுத்தினோம். 3 மாதம் நமக்கு தெரியாமலேயே அந்த வைரஸ் நம்மிடையே பரவியதுதான் அதற்கு காரணம். ஆனால் ஒமைக்ரான் வி‌ஷயத்தில் அப்படியல்ல. தென் ஆப்பிரிக்காவில் அது பரவ தொடங்கியதுமே நாம் அது தொடர்பான ஆய்வுகளில் மேம்பட்டு விட்டோம்.

    அதன் தன்மை, அதன் பரவல், குணம், அதன் பாதிப்பின் வேகம் போன்ற அனைத்தும் தற்போது இந்திய நிபுணர்களிடம் தெளிவான புரிதலுடன் இருக்கிறது. ஒமைக்ரானை நாம் முன்கூட்டியே கணித்து விட்டதால் அதை தடுப்பதும் மிக மிக எளிதாகும். எனவே ஒமைக்ரானை மிக வேகமாக கட்டுப்படுத்தி விடலாம்” என்றார்.

    மூத்த விஞ்ஞானி டாக்டர் ராமன்கங்காதர் கூறுகையில், “டெல்டா வைரஸ் இந்தியாவில் பரவிய போது தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாகவே இருந்தது. தற்போது இந்தியாவில் 55 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். எனவே ஒமைக்ரானை எளிதில் கட்டுப்படுத்திவிட முடியும்” என்றார்.

    Next Story
    ×