search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    3-வது கட்ட தடுப்பூசி பரிசோதனைக்கு அனுமதி கேட்ட பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அதிரடி உத்தரவு

    3-வது கட்ட தடுப்பூசி மருத்துவ பரிசோதனை நடத்த பாரத் பயோடெக் நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது. அதற்கு, 2-வது கட்ட பரிசோதனையின் முழுமையான விவரங்களை அளிக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் பெருந்தொற்று, இந்தியாவை பாடாய்ப்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 70 லட்சத்தை நோக்கி விரைகிறது. 1.07 லட்சம் பேர் கொரோனாவுக்கு இரையாகி இருக்கிறார்கள். இந்த பெருந்தொற்றை தடுக்க தடுப்பூசி மிகுந்த ஆவலுடன் நாட்டு மக்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

    உள்நாட்டில், ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தார், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் சேர்ந்து ‘கோவோக்சின்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி வருகிறார்கள்.

    இதன் இரண்டாவது கட்ட மருத்துவ பரிசோதனை தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையை உள்நாட்டில் நடத்துவதற்கு அனுமதி கேட்டு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு பாரத் பயோடெக் நிறுவனம் 2-ந் தேதி விண்ணப்பம் செய்துள்ளது.

    அதில் இந்த தடுப்பூசியை 10 மாநிலங்களில் டெல்லி, மும்பை, பாட்னா, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் 28 ஆயிரத்து 500 பேருக்கு செலுத்தி பரிசோதிக்க வேண்டியது உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதல் இரு கட்ட மருத்துவ பரிசோதனை பற்றிய தற்காலிக தரவுகளையும் பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் வழங்கி உள்ளது.

    இந்த விண்ணப்பம் குறித்து மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் வல்லுனர் குழு (எஸ்.இ.சி.) விவாதித்தது. இதில், 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையின் வடிமைப்பு, கொள்கை அளவில் திருப்திகரமாக உள்ளது. ஆனாலும் கொரோனா அறிகுறிகள் இன்மையின் வரையறை பற்றிய தெளிவுகள் தேவை என கருதியது.

    மேலும், 2-வது கட்ட மருத்துவ பரிசோதனையின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு தரவில் இருந்து அடையாளம் காணப்பட்ட பொருத்தமான அளவைக் கொண்டு ஆய்வு தொடங்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில், 2-வது கட்ட மருத்துவ பரிசோதனைபற்றிய பாதுகாப்பு, நோய் எதிர்ப்பு பற்றிய முழுமையான தரவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் வழங்க வேண்டும் என்று வல்லுனர் குழு கருதுகிறது. இது தொடர்பாக அந்த நிறுவனத்துக்கு தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் கோவேக்சின் தடுப்பூசி, செலுத்தப்பட்ட எல்லா பிரிவினரிடையேயும் தாங்கும் திறனைக் கொண்டிருக்கிறது, தீவிரமான எதிர்விளைவுகள் ஏதுமில்லை எனவும் வல்லுனர் குழு கூறி உள்ளது.

    எனவே இந்த தரவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் அளித்த பிறகு அவற்றை பரிசீலித்துதான் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×