search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் போர் விமானம்
    X
    ரபேல் போர் விமானம்

    இந்திய விமானப்படையில் இணைந்த ரபேல் போர் விமானங்கள்

    பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட ரபேல் போர் விமானங்கள், இந்திய விமானப்படையில் இன்று முறைப்படி இணைக்கப்பட்டன.
    புதுடெல்லி:

    உலகின் அதிநவீன போர் விமானமான ரபேல் விமானங்களை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் தயாரித்து வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதில் முதல்கட்டமாக, 5 ரபேல் போர் விமானங்கள் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. துல்லிய தாக்குதலுக்க பெயர்பெற்ற இந்த விமானங்கள், ஜூலை 27-ந் தேதி, அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்துக்கு வந்து சேர்ந்தன.

    இந்நிலையில், இந்த விமானங்கள் இன்று (வியாழக்கிழமை) முறைப்படி இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. இதற்கான விழா, அம்பாலா விமானப்படை தளத்தில் நடைபெற்றது. முதலில், ரபேல் விமானம், முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அனைத்து மத வழிபாட்டுடன் சம்பிரதாய பூஜை (சர்வ தர்ம பூஜை) செய்யப்பட்டது. பின்னர் ரபேல் விமானங்கள் மற்றும் தேஜஸ் விமானங்கள் வானில் சாகசங்கள் நிகழ்த்திக் காட்டின.

    ரபேல் விமானங்களுக்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர், முறைப்படி ரபேல் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டன. இதற்கான ஆவணத்தை விமானப்படையின் 17 படைப்பிரிவின் 'தங்க அம்புகள்' குழு கட்டளை அதிகாரி கேப்டன் ஹர்கீரத் சிங்கிடம் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் வழங்கினார். முன்னதாக பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பிரான்ஸ் பாதுகாப்புத்துறை மந்திரிக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், பிரான்ஸ் ராணுவ மந்திரி பிளாரன்ஸ் பார்லி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா, பாதுகாப்பு செயலாளர் அஜய்குமார், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் சதீ‌‌ஷ்ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ரபேல் விமானத்தை விமானப்படையில் இணைப்பதற்கான ஆவணத்தை வழங்கும் ராஜ்நாத்சிங்.


     பிரான்ஸ் குழு சார்பில், இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இமானுவேல் லெனைன், விமானப்படை தளபதி எரிக் அடல்லட், விமானப்படை துணைத்தளபதி, ரபேல் விமானத்தை தயாரித்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தின் தலைவர் எரிக் டிரேப்பியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்திய விமானப்படையின் 17வது படைப்பிரிவில் (கோல்டன் ஆரோஸ்) ரபேல் விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் இந்திய விமானப்படை மேலும் வலிமை பெற்றுள்ளது.
    Next Story
    ×