என் மலர்
செய்திகள்

சமூக இடைவெளியுடன் அமர்ந்திருக்கும் பயணிகள்
நாடு முழுவதும் 5 மாதங்களுக்கு பிறகு ஓடத் தொடங்கிய மெட்ரோ ரெயில்கள்- பயணிகள் மகிழ்ச்சி
டெல்லி உள்ளிட்ட நகரங்களில் 5 மாதங்களுக்கு பிறகு மெட்ரோ ரெயில்கள் இயங்கத் தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு ஒரு சில தினங்களுக்கு முன்பாகவே, மெட்ரோ ரெயில் சேவை நாடு முழுவதும் முடக்கப்பட்டது. தற்போது, பொது முடக்கத்தில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், செப்டம்பர் மாதம் 7-ந் தேதி முதல் படிப்படியாக மெட்ரோ ரெயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி 5 மாதங்களுக்கு பிறகு இன்று நாடு முழுவதும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை, டெல்லி, பெங்களூரு, நொய்டா, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டதால் பயணிகள் உற்சாக பயணத்தை தொடங்கி உள்ளனர். குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே தற்போது ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சூழ்நிலைக்கு ஏற்ப படிப்படியாக அனைத்து வழித்தடங்களிலும் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
கொரோனா தொற்று பரவி வரும் சூழ்நிலையில் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டிருப்பதால், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பயணிகள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு மூலமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. தற்போதைக்கு மெட்ரோ ரெயில்கள் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நிற்காது. குறிப்பிட்ட சில ரெயில்களில் மட்டுமே நின்று செல்கின்றன. சமூக இடைவெளி, உடல் வெப்ப நிலை பரிசோதனை போன்ற அனைத்து பாதுகாப்பு விதிகளும் கடுமையாக பின்பற்றப்படுகின்றன.
Next Story