search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஞ்சா செடிகளை பயிரிட்டதாக கைதான 4 பேரையும், கஞ்சா செடிகளையும், போலீசார் சோதனை நடத்தியதையும் காணலாம்.
    X
    கஞ்சா செடிகளை பயிரிட்டதாக கைதான 4 பேரையும், கஞ்சா செடிகளையும், போலீசார் சோதனை நடத்தியதையும் காணலாம்.

    சித்ரதுர்கா அருகே 4 ஏக்கரில் பயிரிட்ட ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

    சித்ரதுர்கா அருகே 4 ஏக்கரில் பயிரிட்ட ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
    சித்ரதுர்கா :

    சித்ரதுர்கா மாவட்டம் ராமப்புரா போலீசாருக்கு, மொலகால்மூரு தாலுகா வதேரஹள்ளி கிராமத்தில் விவசாய நிலத்தில் கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வருவதாக தகவல் வந்தது. இதைதொடர்ந்து ராமப்புரா சப்-இன்ஸ்பெக்டர் குட்டப்பா தலைமையில் போலீசார் குறிப்பிட்ட விவசாய நிலத்திற்கு சென்று நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு 4 ஏக்கரில் கஞ்சா பயிரிட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த கஞ்சா செடிகளை போலீசார் வெட்டினர். பின்னர் அவற்றை பறிமுதல் செய்து லாரிகளில் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா செடிகளின் மதிப்பு ரூ.1 கோடி என்று போலீசார் தெரிவித்தனர்.

    அத்துடன் 4 ஏக்கரில் கஞ்சா பயிரிட்டதாக 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கைதானவர்கள் பல்லாரி மாவட்டம் சண்டூரை சேர்ந்த ருத்ரேஷ், கூடலகியை சேர்ந்த சுமந்த், ராமப்புராவை சேர்ந்த மஞ்சுநாத், ஜம்புநாத் ஆகியோர் என்பதும், இவர்கள் விளை நிலத்தில் கஞ்சா பயிரிட்டு ராமப்புரா, சித்ரதுர்கா, மொலகால்மூரு, பல்லாரி மாவட்டத்திலும் விற்பனை செய்து வந்ததும், இந்த தோட்டம் சுமந்துக்கு சொந்தமானது என்பதும், ருத்ரேஷ் குத்தகைக்கு எடுத்து கஞ்சா பயிரிட்டு வந்ததும், இதற்கு சுமந்த், மஞ்சுநாத், ஜம்புநாத் ஆகியோர் துணையாக இருந்து வந்ததும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக ராமப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான 4 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். போலீசார், வனத்துறையினர் கண்ணில் மண்ணை தூவிவிட்டு 4 பேரும் 4 ஏக்கர் நிலத்தில் கஞ்சா பயிரிட்டுள்ளனர். எனவே இதற்கு போலீசார், வனத்துறையினர் துணை போனார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் பின்னணியில் யார்-யார் உள்ளார்கள் என்பது பற்றி விசாரிக்க தனிப்படை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு ராதிகா உத்தரவிட்டுள்ளார்.

    பெங்களூருவில் ஏற்கனவே போதைப்பொருள் விற்பனையில் கன்னட திரையுலகினருக்கு தொடர்பு இருப்பதாகவும், அதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் சித்ரதுர்கா அருகே 4 ஏக்கரில் பயிரிட்ட கஞ்சா சிக்கிய விவகாரம் கர்நாடகம் முழுவதும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×