search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    கர்நாடக முதல்வராக 4-வது முறையாக பதவி ஏற்றார் எடியூரப்பா

    குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை அடுத்து பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவி ஏற்றார்.
    கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடந்து வந்தது. கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது.

    இதனையடுத்து சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் விழுந்தன. இதனால் குமாரசாமி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில்  இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்த எடியூரப்பா, பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளதாக கூறி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரும் ஆட்சியமைக்க எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்தார்.

    அதன்படி இன்று மாலை கவர்னர் மாளிகையில் எடியூரப்பா முதல்வர் பதவி ஏற்பதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்றன. சரியாக மாலை 6.05 மணியளவில் பதவி ஏற்பதற்காக எடியூரப்பா கவர்னர் மாளிகை வந்தார். அப்போது பா.ஜனதா தலைவர்கள் பூங்கொத்து அளித்து வரவேற்றனர். பதவி ஏற்பு விழாவிற்கு எம்எஸ் கிருஷ்ணா வருகை தந்திருந்தார்.

    எடியூரப்பா கவர்னர் வஜூபாய் வாலாவின் வருகைக்காக காத்திருந்தார். 6.30 மணியளவில் கவர்னர் பதவி ஏற்பு விழா மேடைக்கு வந்தார். தேசியக் கீதத்துடன் விழா தொடங்கியது. 6.32 மணிக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். எடியூரப்பா பதவிப் பிரமாணம் செய்து முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.
    Next Story
    ×