search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திர சட்டசபை தேர்தலில் ரோஜா மீண்டும் போட்டி
    X

    ஆந்திர சட்டசபை தேர்தலில் ரோஜா மீண்டும் போட்டி

    ஆந்திர சட்டசபை தேர்தலில் ரோஜா மீண்டும் போட்டியிடுகிறார். அவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்தார். #ParliamentElection #Roja
    அமராவதி:

    பாராளுமன்ற தேர்தலுடன், 175 இடங்களை கொண்ட ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

    அடுத்த மாதம் 11-ந் தேதி நடக்க உள்ள இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கி உள்ளார்.

    அதே நேரத்தில் ஆட்சியைத் தக்க வைப்பதற்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடுவும் போராடி வருகிறார்.

    இந்தநிலையில் 175 இடங்களுக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலை கட்சித்தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி கடப்பா மாவட்டம் இடுபுலபயாவில் நேற்று வெளியிட்டார்.

    அப்போது அவர் பேசுகையில், “வேட்பாளர் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோருக்கு 41 இடங்களும், சிறுபான்மையினருக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அனைத்து சமூகத்தினருக்கும் ‘சீட்’ வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்புகள், பொதுமக்கள் ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது” என கூறினார்.



    வேட்பாளர் பட்டியலின்படி ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி கடப்பாவில் உள்ள புலிவேந்துலா தொகுதியில் இருந்து சட்டசபைக்கு போட்டியிடுகிறார்.

    முதல்-மந்திரி என்.சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக குப்பம் தொகுதியில் கே.சந்திரமவுலி என்பவர் களம் இறக்கப்பட்டுள்ளார்.

    நடப்பு சட்டசபையில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள நடிகை ரோஜாவுக்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

    மறைந்த முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமராவின் மருமகன் தக்குபட்டி வெங்கடேஸ்வரராவ், புர்சூர் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

    என்.டி.ராமராவின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணாவுக்கு (தெலுங்குதேசம்) எதிராக இந்துப்பூர் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கே. இக்பால் அகமது போட்டியிடுகிறார்.

    தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து சமீபத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு தாவிய தலைவர்கள் சிலருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    2014-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 2 பேருக்கு மட்டும் இப்போதும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 23 தொகுதிகளுக்கும் புதுமுகங்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    நெல்லூர் தொகுதி எம்.பி. மேகபதி ராஜமோகன் ரெட்டி, ஓங்கோல் தொகுதி எம்.பி. ஒய்.வி. சுப்பா ரெட்டி ஆகிய இருவருக்கும் மீண்டும் களம் காண வாய்ப்பு தரப்படவில்லை. #ParliamentElection #Roja

    Next Story
    ×