search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் தோற்றுவிட்டது - மத்திய அரசு மீது மன்மோகன் சிங் தாக்கு
    X

    வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் தோற்றுவிட்டது - மத்திய அரசு மீது மன்மோகன் சிங் தாக்கு

    வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு தோற்று விட்டது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சாடி உள்ளார். #ManmohanSingh #EmploymentOpportunities
    புதுடெல்லி:

    டெல்லியில் நேற்று நடந்த மேலாண்மை கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நாட்டின் பொருளாதார நிலை, நாடு எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் பற்றி விரிவாக எடுத்துக்கூறினார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயிகளின் கடுமையான நெருக்கடி, குறைந்து வரும் வேலை வாய்ப்புகள், சுற்றுச்சூழல் சீர்குலைவு எல்லாவற்றுக்கும் மேலாக பணித்தளங்களில் பிரிவினை சக்திகள் ஆகியவை இன்று நாடு எதிர்கொள்ளும் சவால்களாக அமைந்துள்ளன.

    விவசாயிகளின் தற்கொலைகளும், விவசாயிகள் அடிக்கடி நடத்தி வருகிற போராட்டங்களும் நமது பொருளாதார கட்டமைப்பு சமநிலையின்மையை பிரதிபலிக்கிறது. இதை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும். அரசியல் தலைமை (மத்திய அரசு) இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

    வேலை வாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை பெருகி வருகிறது. அது வேலை இழப்பு வீழ்ச்சிக்கு வழிநடத்தி உள்ளது. கிராமப்புறங்களில் கடன்கள் பெருகி வருவதும், நகர்ப்புறங்களில் நிலவுகிற குழப்பங்களும் சேர்ந்து எதிர்பார்ப்பு மிக்க இளைஞர்களை அமைதி இழந்து போகச்செய்கிறது.

    தொழில் துறையில் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. தொழில்துறையும் வேகமான வளர்ச்சியை அடையவில்லை.

    நாட்டின் பொருளாதாரம் பெருகுவதில் சிறு தொழில் துறையும், அமைப்பு சாரா தொழில் துறையும் துடிப்பு மிக்கவை. ஆனால் பேரழிவை ஏற்படுத்தி உள்ள ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையாலும், சரக்கு மற்றும் சேவைவரி நடைமுறைப்படுத்தப்பட்டதாலும் வேலை வாய்ப்புகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    தொழில் துறையையும், வர்த்தக துறையையும் ஊக்குவிப்பதற்கு நல்ல ஆழ்ந்த சிந்தனையில் தோன்றும் கொள்கைகளும், நல்ல செயல்பாட்டு உத்திகளும் தேவை.

    இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிற உலகம். ஒரு பக்கம் உலகப்பொருளாதாரத்தில் நாம் நம்மை ஒருங்கிணைத்துக்கொண்டிருக்கிறோம். உலக சந்தைக்கு நம்மை வெளிப்படுத்தி வருகிறோம். மற்றொரு பக்கத்தில், உள்நாட்டில் நாம் மிகப்பெரிய பொருளாதார, சமூக சவால் களை எதிர்கொண்டு வருகிறோம்.

    இது நமது ஜனநாயக உணர்வுகளுக்கும், நமது பொறுமைக்கும், சகிப்புத்தன்மைக்கும் ஒரு சோதனையான கால கட்டம்.

    2030-ம் ஆண்டுக்குள் உலக பொருளாதாரத்தில் 3-வது முக்கிய நாடாக இந்தியா வந்து விடும் என கூறப்படுகிற முக்கியமான காலகட்டத்தில் நீங்கள் (மாணவர்கள்) வர்த்தக உலகில் இணைகிறீர்கள்.

    இதுவரை இல்லாத வகையில் மிக வேகமாக மாற்றங்களை சந்தித்து வருகிற உலகில் உங்களுக்கு வாய்ப்புகளும், சவால் களும் நிரம்ப இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×