search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் இருந்து பிரியங்கா காந்தி டெல்லி திரும்பினார் - 7ந்தேதி காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்பு
    X

    அமெரிக்காவில் இருந்து பிரியங்கா காந்தி டெல்லி திரும்பினார் - 7ந்தேதி காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்பு

    பிரியங்கா காந்தி அமெரிக்காவில் இருந்து டெல்லி திரும்பினார். நாளை மறுநாள் நடைபெறும் காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்கிறார். #PriyankaGandhi #Congress
    புதுடெல்லி:

    உத்தரபிரதேசத்தில் உள்ள 80 எம்.பி. தொகுதிகள் மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு மிகவும் முக்கிய பங்களிப்பாக உள்ளன.

    ஆனால் அந்த மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி செல்வாக்கை இழந்து பரிதவித்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் அந்த மாநிலத்தில் 2 தொகுதிகளில் மட்டுமே காங்கிரசால் வெற்றி பெற முடிந்தது.

    இந்த நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல்களிலும் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி அமையவில்லை. இதனால் அந்த கட்சிக்கு உத்தரபிரதேசத்தில் எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றி கிடைக்குமா? என்பதில் கேள்விகுறிகள் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் ராகுல்காந்தி ஈடுபட்டுள்ளார். முதல் கட்டமாக அவர் தனது சகோதரி பிரியங்கா உதவியை நாடி உள்ளார். 2 வாரங்களுக்கு முன்பு பிரியங்காவை அவர் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவராக அறிவித்தார்.

    பிரியங்காவுக்கு உத்தரபிரதேச மாநிலத்தில் கிழக்கு மண்டலத்தில் உள்ள 40 தொகுதிகளின் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 40 தொகுதிகளிலும் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 3-வது, 4-வது இடங்களில்தான் வந்தது. எனவே இந்த 40 தொகுதிகளும் பிரியங்காவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    பிரியங்கா காங்கிரஸ் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டபோது குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு சென்று இருந்தார். கடந்த 2 வாரமாக அவர் அமெரிக்காவில் தங்கியிருந்தார்.

    இந்த நிலையில் நேற்று பிரியங்கா டெல்லி திரும்பினார். உடனடியாக அவர் சோனியாவையும், ராகுலையும் சந்தித்து பேசினார். இன்று அவர் தனது உறவினர்கள் வீட்டுக்கு சென்று வந்தார்.

    நாளை முதல் பிரியங்கா தீவிர அரசியலில் ஈடுபட தொடங்குவார் என்று தெரிய வந்தது. அவரது பிரசார பயண திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. உத்தரபிரதேசத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து காங்கிரசுக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்த பிரியங்கா அதிரடியில் இறங்குவார் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் கூட்டத்துக்கு ராகுல் காந்தி ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டத்தில் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரசை தயார்படுத்தும் வகையில் முக்கிய கொள்கை முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளன. இந்த கூட்டத்தில் முதல் முறையாக பிரியங்காவும் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

    பிரியங்கா பங்கேற்கும் முதல் கட்சி நிர்வாக கூட்டம் என்பதால் வியாழக்கிழமை நடக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது. கூட்டத்தில் பிரியங்கா தனது புதிய கருத்துக்களை வெளியிடுவார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

    பிரியங்கா வழிகாட்டுதலின் பேரில் புதிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுத்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே பிரியங்கா தனக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரபிரதேச மாநில கிழக்கு மண்டல பொறுப்பாளர் பதவியை இந்த வாரமே ஏற்க உள்ளார். அதற்கான தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. அதன் பிறகு அவர் உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர்களை அழைத்து பேச உள்ளார்.

    வருகிற 9-ந்தேதி காங்கிரஸ் மாநில தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திலும் பிரியங்கா பங்கேற்பார் என்று தெரிகிறது. தேர்தலுக்கு காங்கிரசை தயார்படுத்தும் வகையில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் பிரியங்கா பேசுவார் என்று தெரிய வந்துள்ளது.

    பிரியங்காவுக்கு மிக முக்கியமான வேலை ஒதுக்கி கொடுத்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். அதன்படி பிரியங்கா புதுவிதமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

    பா.ஜனதா தலைவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் பிரியங்காவின் பிரசாரம் இருக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். ஆனால் உத்தரபிரதேசத்தில் காங்கிரசுக்கு ஆதரவு திரட்டுவது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த மாத இறுதியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கூட உள்ளது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரசை தயார்படுத்துவது தொடர்பாக இறுதி வடிவம் கொடுக்கப்பட உள்ளது. அப்போது காங்கிரசுக்கு பிரியங்கா செய்ய வேண்டிய பணிகள் பற்றிய பொறுப்புகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட உள்ளது.

    ராகுல் தனியாக நின்று பிரசாரம் செய்ய முடியாமல் நெருக்கடியில் தவித்து வருகிறார். அவரது நெருக்கடியை தீர்க்கும் வகையில் பிரியங்காவின் பணிகள் அமையும் என்று கருதப்படுகிறது.

    குறிப்பாக கூட்டணி அமைக்கும் வி‌ஷயங்களில் பிரியங்காவின் பங்களிப்பு கணிசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் காங்கிரசை தவிர்த்து விட்டு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் கூட்டணி அமைத்துள்ளனர்.

    அந்த கூட்டணியில் காங்கிரசையும் இணைக்க பிரியங்கா இப்போதே முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இந்த இரு கட்சிகளையும் காங்கிரஸ் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட்டால் நாடு தழுவிய மெகா கூட்டணிக்கு அடித்தளம் அமைத்து விடலாம் என்று பிரியங்கா கூறி வருகிறார். எனவே அவர் விரைவில் கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

    பிரியங்கா இத்தகைய பணிகளில் இறங்குவார் என்பதால்தான் அவரை காங்கிரசின் பிரம்மாஸ்திரம் என்று சொல்கிறார்கள். ஆனால் உத்தரபிரதேசத்தில் எடுத்த உடன் அவருக்கு வெற்றி கிடைக்குமா? என்பதில் காங்கிரசாருக்கே சந்தேகம் எழுந்துள்ளது.

    உத்தரபிரதேசத்தில் 1989-ம் ஆண்டுடன் காங்கிரஸ் ஆதிக்கம் முடிந்து போனது. பிரியங்கா பிரம்மாஸ்திரத்தை வீசுவதை பொறுத்தே உத்தரபிரதேசத்தில் காங்கிரசுக்கு எத்தகைய வெற்றி கிடைக்கும் என்பது தெரிய வரும். #PriyankaGandhi #Congress
    Next Story
    ×