search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
    X

    அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகும் படி கார்த்தி சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. #KartiChidambaram #SC #ED
    புதுடெல்லி:

    கடந்த 2006-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இதில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் இதற்கு உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்தநிலையில் பிப்ரவரி மாதம் 21-ந்தேதி முதல் 28-ந் தேதி வரை பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டியிருப்பதால் அதற்கு அனுமதி அளிக்குமாறு கார்த்தி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.


    இந்த மனு கடந்த 28-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது என்று அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது.

    இதை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

    கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்த உள்ள தேதிகளை ஜன.30-ம் தேதி தெரிவிக்குமாறு அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லும் முன்பு ரூ.10 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதோடு சட்டத்துடன் விளையாடக் கூடாது என்றும் கார்த்தி சிதம்பரத்தை எச்சரித்தது.

    இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

    கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு பொதுச்செயலாளரிடம் ரூ.10 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும். வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிறகு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

    ஐ.என்.எக்ஸ் மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்குகளில் விசாரணைக்காக அமலாக்கத்துறை முன்பு மார்ச் 5, 6, 7 மற்றும் 12-ந்தேதிகளில் ஆஜராக வேண்டும்.

    நீங்கள் (கார்த்தி சிதம்பரம்) விரும்பியவாறு எங்கு வேண்டுமானலும் பிப்ரவரி 10-ந்தேதி முதல் 26-ந்தேதிவரை செல்லலாம். ஆனால் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். சட்டத்துடன் விளையாடக் கூடாது. நீங்கள் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் நாங்கள் நிறைய சொல்ல வேண்டி இருக்கும்.

    இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. #KartiChidambaram #SC #ED 
    Next Story
    ×