search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவில் லாரியில் செம்மரம் கடத்திய 37 பேர் கைது - தமிழகத்தை சேர்ந்தவர்கள்
    X

    ஆந்திராவில் லாரியில் செம்மரம் கடத்திய 37 பேர் கைது - தமிழகத்தை சேர்ந்தவர்கள்

    சித்தூர் பீலேர் பகுதியில் லாரியில் செம்மரக்கட்டைகள் கடத்தி வந்த தமிழ்நாட்டை சேர்ந்த 37 பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர்.
    சித்தூர்:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பீலேர் பகுதியில் வனத்துறை அதிகாரி வெங்கட் நரசிம்மன் தலைமையில் வனத்துறையினர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கலகடா என்ற ஊரில் இருந்து பீலேர் நோக்கி நேற்று முன்தினம் இரவு லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை வனத்துறை அதிகாரிகள் மறித்தனர். ஆனால் லாரி நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், லாரியை பின் தொடர்ந்து விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். அப்போது லாரிக்குள் சோதனை நடத்தியதில் 37 பேர் பதுங்கி இருந்தனர்.

    மேலும் அவர்களிடம் செம்மரங்களை வெட்டும் உபகரணங்களான 2 ரம்பம், 20 கோடாரிகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் அவர்களை கைது செய்து பீலேர் வனத்துறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் 37 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து செம்மரம் வெட்ட பயன்படுத்திய ரம்பம், கோடாரி மற்றும் கடத்தி வந்த செம்மரக்கட்டைகள் ஆகியவற்றை அவர்களிடம் இருந்து வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×