என் மலர்
செய்திகள்

சபரிமலை விவகாரத்தில் ராகுல் காந்தி திடீர் பல்டி
திருவனந்தபுரம்:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை தரிசனத்திற்கு அனுமதிப்பதில்லை.
இளம்பெண்களை தரிசனத்திற்கு அனுமதிக்காமல் இருப்பது கோவில் ஆச்சாரம். அதை மீறக்கூடாது என்று ஐயப்ப பக்தர்களும், பந்தளம் ராஜகுடும்பம், கோவில் தந்திரிகளும் கூறி வந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வரவேற்பு தெரிவித்தார். அதே நேரம் கேரள மாநில காங்கிரசார் இத்தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இத்தீர்ப்பு தொடர்பாக கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் நடத்தி வந்த போராட்டத்திலும் பங்கேற்றனர். கேரள முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன்சாண்டி, மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.அந்தோணி ஆகியோரும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் ராகுல் காந்தி கடந்த 2 நாட்களாக துபாய் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு வாழும் கேரள மக்களை சந்தித்து கலந்துரையாடினார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு ஆதரவான கருத்தையும், எதிர்ப்பான கருத்தையும் அறிந்து கொண்டேன். இரு தரப்பினரும் கூறுவதில் நியாயம் இருக்கிறது.
ஒரு பிரிவினர் கோவிலின் ஆச்சாரத்தை ஒரு போதும் மீறக்கூடாது என்கிறார்கள். இன்னொரு பிரிவினர் அனைத்து வயது பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.
பெண்களுக்கு சமத்துவமும், சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரம் கோவிலின் ஆச்சாரங்களை மீறக்கூடாது என்பதிலும் நியாயம் இருக் கிறது.
எனவே இந்த விவகாரத்தில் இன்னும் குழப்பமான சூழ்நிலையே நிலவுகிறது. என்ன நேர்ந்தாலும் காங்கிரஸ் கட்சி கேரள மக்களின் உணர்வுகளுக்கு, விருப்பத்திற்கு மாறாக செயல்படாது. மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதன்படி தான் செயல்பட வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன். அதே நேரம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து கருத்து எதுவும் கூற விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala #RahulGandhi