என் மலர்
செய்திகள்

சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்கம் - தீயணைப்புத்துறை இயக்குனரானார் அலோக் வர்மா
சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா, மத்திய தீயணைப்புத் துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். #AlokVarma
புதுடெல்லி:
சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை மத்திய அரசு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது. இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.
இதை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது, மீண்டும் அவரை பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, அலோக் வர்மா மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக நேற்று பொறுப்பேற்றார்.
இதற்கிடையே, டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நியமனக்குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, நீதிபதி ஏ.கே.சிக்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில், சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை நீக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா, தீயணைப்புத்துறை, குடிமை பாதுகாப்பு, ஊர்க்காவல்படை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அலோக் வர்மா பணியிடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து சிபிஐ இயக்குநர் பொறுப்பை நாகேஸ்வர ராவ் கவனிப்பார் என்றும், புது இயக்குநர் நியமிக்கப்படும் வரை சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் தொடருவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. #AlokVarma
Next Story






