search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 வங்கிகள் இணைப்புக்கு மந்திரிசபை ஒப்புதல் - பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
    X

    3 வங்கிகள் இணைப்புக்கு மந்திரிசபை ஒப்புதல் - பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

    பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் 3 வங்கிகள் இணைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. #VijayaBank #DenaBank #BarodaBank #Merger
    புதுடெல்லி:

    மத்திய மந்திரிசபை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் முக்கியமாக, பரோடா (பாங்க் ஆப் பரோடா) வங்கியுடன், விஜயா வங்கி மற்றும் தேனா வங்கியை இணைக்கும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    பொதுத்துறை வங்கிகளான இந்த 3 வங்கிகளையும் இணைப்பது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து பரிசீலித்து வந்தது. ஆனால் இதற்கு வங்கி கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும் நடத்தி வந்தது. எனினும் இந்த இணைப்புக்கு மத்திய மந்திரிசபை தற்போது ஒப்புதல் அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதன் மூலம் விஜயா மற்றும் தேனா வங்கிகளின் வர்த்தகம், சொத்துகள், உரிமைகள், உரிமங்கள், ஒப்புதல்கள் உள்ளிட்ட அனைத்தும் பரோடா வங்கியுடன் இணைக்கப்படும்.

    மேற்படி 2 வங்கிகளின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் புதிய வங்கியில் அதே பணிநிலையில் தொடர்வார்கள். அவர்களுக்கான ஊதியம் மற்றும் படிகள் அனைத்தும் தொடர்ந்து அதே நிலையில் வழங்கப்படும். அவர்களின் நலன்கள் காக்கப்படுவதை பரோடா வங்கி உறுதி செய்யும்.



    இந்த இணைப்பு மூலம் பரோடா வங்கி நாட்டின் 2-வது பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும். வருகிற நிதியாண்டு முதல் (ஏப்ரல் 1-ந் தேதி) இந்த 3 வங்கிகளும் இணைந்து ஒரே வங்கியாக செயல்படும் என மந்திரிசபையில் முடிவு எடுக்கப்பட்டது.

    இதைத்தவிர வட்டி சமநிலைப்படுத்தும் திட்டத்தில் ஜவுளி ஏற்றுமதியாளர்களையும் இணைக்க மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. வர்த்தகத்துறை கொண்டு வந்த இந்த பரிந்துரையை மந்திரிசபை ஏற்றுக்கொண்டு இருப்பதன் மூலம் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் ரூ.600 கோடி வரை பலனடைய முடியும்.

    இதைப்போல குடும்ப நலத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்வஸ்தா நக்ரிக் அபியான், கருத்தடை சாதனம் வழங்குதல் உள்ளிட்ட 5 திட்டங்களை 2020-ம் ஆண்டு வரை தொடர்வது என மந்திரிசபை முடிவு செய்தது.

    மேலும் ‘பழங்குடியினர் திருத்த மசோதா 2018’-க்கும் மந்திரிசபையில் ஒப்புதல் பெறப்பட்டது.

    இந்த தகவல்களை மந்திரிசபை கூட்டத்துக்குப்பின் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  #VijayaBank #DenaBank #BarodaBank #Merger 
    Next Story
    ×