search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் - வெளிநாட்டு இடைத்தரகரின் விசாரணை காவல் மேலும் நீட்டிப்பு
    X

    வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் - வெளிநாட்டு இடைத்தரகரின் விசாரணை காவல் மேலும் நீட்டிப்பு

    வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கிய வெளிநாட்டு இடைத்தரகரின் விசாரணை காவலை மேலும் 7 நாள்களுக்கு நீட்டித்து சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று அனுமதித்துள்ளது. #VVIPchoppercase #EDarrests #ChristianMichel #EDarrestsChristianMichel
    புதுடெல்லி:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
     
    இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக பிரிட்டன் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்தனர். துபாயில் இருக்கும் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

    இதற்கிடையே, கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் சமீபத்தில் துபாய் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். துபாயில் இருந்து விமானம் மூலம் அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து, அவரிடம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.



    அதன்பின், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 5-ம் தேதி அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.  கிறிஸ்டியன் மைக்கேலை 5 நாள் காவலில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பதற்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.  தொடர்ந்து 3 முறை சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டது.

    இதையடுத்து, மைக்கேலிடம் விசாரிக்க அனுமதிக்குமாறு பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் சிபிஐ கோர்ட்டில் முறையீடு செய்தனர். இதைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள்  கிறிஸ்டியன் மைக்கேலை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கடந்த 22-ம் தேதி அனுமதித்தது.

    அந்த விசாரணை காலம் முடிவடைந்ததால் கிறிஸ்டியன் மைக்கேல் கோர்ட்டில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து, பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் மைக்கேலை மேலும் 7 நாள் விசாரிக்க நீதிபதி அரவிந்த் குமார் அனுமதி அளித்துள்ளார். #VVIPchoppercase #EDarrests #ChristianMichel #EDarrestsChristianMichel 
    Next Story
    ×