search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் விவகாரத்தில் ஜேபிசி விசாரணை இல்லை- காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு
    X

    ரபேல் விவகாரத்தில் ஜேபிசி விசாரணை இல்லை- காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு

    ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் எழுப்பிய கோரிக்கையை அரசு நிராகரித்ததால் மக்களவையில் அமளி ஏற்பட்டது. #WinterSession #CongDemandsJPC
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ரபேல் விவகாரம், மேகதாது விவகாரம் மற்றும் மாநிலம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களும் வழங்கப்படுகின்றன. கூட்டத்தொடரின் 7-வது நாளான இன்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.



    மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்களும், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கேட்டு தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்களும் முழக்கங்கள் எழுப்பினர். இதுஒருபுறமிருக்க ஆளும் பாஜக எம்பிக்கள் சிலர், தங்கள் இருக்கைகளில் இருந்தபடியே சில பிரச்சினைகளை எழுப்பினர். இதன் காரணமாக அவையில் கடும்  கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

    இதனால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை கூடியபோதும் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தது. ரபேல் ஒப்பந்தத்தால் அரசுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், ரபேல் விவகாரம் தொடர்பாக அரசு விவாதிக்க தயாராக உள்ளது என்றார். ஆனால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார்.

    கோரிக்கை ஏற்கப்படாததால் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். அவையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். மற்ற கட்சிகளின் எம்பிக்களும் அங்கு சென்று அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை கூடியபோது வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. #WinterSession #CongDemandsJPC
    Next Story
    ×