search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றி யாருக்கு?- 5 மாநில சட்டசபை தேர்தலில் நாளை ஓட்டு எண்ணிக்கை
    X

    வெற்றி யாருக்கு?- 5 மாநில சட்டசபை தேர்தலில் நாளை ஓட்டு எண்ணிக்கை

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. 5 மாநிலங்களிலும் நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. #AssemblyElections
    புதுடெல்லி:

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது.

    முதலில் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு கடந்த மாதம் 12, 20-ந்தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. சராசரியாக 74 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களுக்கு கடந்த மாதம் 28-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. மத்திய பிரதேச மாநிலத்தில் 75 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மிசோரம் மாநிலத்தில் 80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    இதைத் தொடர்ந்து ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களுக்கு கடந்த 7-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தானில் 74 சதவீத வாக்குகள் பதிவானது. தெலுங்கானாவில் 73.2 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

    5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. 5 மாநிலங்களிலும் நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது.

    ஓட்டு எண்ணிக்கையை சுமூகமாக நடத்துவதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 2 லட்சம் ஊழியர்கள் ஓட்டு எண்ணும் பணி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


    சத்தீஸ்கர் மாநிலத்தில் 27 மாவட்டங்களிலும் ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் 306 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. தெலுங்கானாவில் 43 இடங்களில் ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மிசோரம் மாநிலத்தில் 13 மையங்களில் உருவாக்கப்பட்டுள்ள 40 மையங்களில் வாக்குகள் எண்ணப்படும். 5 மாநிலங்களிலும் ஓட்டு எண்ணிக்கையை முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். 8.30 மணியில் இருந்து மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். 10 மணிக்கு ஓரளவு முன்னிலை நிலவரம் தெரிந்து விடும். ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கையையும் உடனுக்குடன் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    11 மணி அளவில் 5 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்பது யார் என்பது உறுதியாகி விடும். 5 மாநில தேர்தல் பாராளுமன்ற தேர்தலுக்கான அரை இறுதி போட்டி போல கருதப்படுவதால் தேர்தல் முடிவுகள் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

    5 மாநில தேர்தலுக்கு முன்பும், ஓட்டுப்பதிவுக்கு பிறகும் பல்வேறு கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஓட்டுப்பதிவுக்கு முந்தைய கருத்து ஒரு மாதிரியாகவும் பிந்தைய கருத்து கணிப்பு வேறு மாதிரியாகவும் அமைந்துள்ளன.

    என்றாலும் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ்தான் ஆட்சியை பிடிக்கும் என்று அனைத்து கருத்து கணிப்புகளும் ஒருமித்த குரலில் கூறி உள்ளன. மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கு இடையே கடும் இழுபறி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானாவில் சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறி உள்ளன.

    மிசோரம் மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியான தேசிய முன்னணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்புகளில் கூறப்பட்டு உள்ளது.

    5 மாநில தேர்தல் நடந்தாலும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் 3 மாநில தேர்தல் முடிவுகள் தான் மிக ஆவலை ஏற்படுத்தி உள்ளன. இந்த 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.

    இந்த 3 மாநிலங்களிலும் சுமார் 65 பாராளுமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. - காங்கிரசுக்கு கிடைக்கும் வாக்கு சதவீதம் பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். #AssemblyElections
    Next Story
    ×