search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் போர் நிறுத்தம் நீட்டிப்பு இல்லை - மத்திய அரசு அறிவிப்பு
    X

    காஷ்மீரில் போர் நிறுத்தம் நீட்டிப்பு இல்லை - மத்திய அரசு அறிவிப்பு

    காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் நிறுத்தம் நீட்டிக்கப் படாது என்றும், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் எனவும் மத்திய அரசு அறிவித்தது.
    புதுடெல்லி:

    காஷ்மீரில் பாதுகாப்பு படைகளை குறிவைத்து பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் புனித ரமலான் மாதத்தையொட்டி மத்திய அரசு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கடந்த மாதம் 17-ந்தேதி நிறுத்தி வைத்தது.

    பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தினால் மட்டுமே பதில் தாக்குதலை மேற்கொண்டது. மற்றபடி பெரும்பாலான நாட்களில் பாதுகாப்பு படையினர் அமைதி காத்து வந்தனர்.

    இந்தநிலையில் ரமலான் மாதம் முடிவடைந்து, ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டங்களும் நிறைவடைந்த நிலையில் காஷ்மீரில் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்பு படைகள் மீண்டும் தொடங்கி இருக்கின்றன.

    இதுபற்றி டெல்லியில் மத்திய உள்துறை இலாகா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டு வந்த நடவடிக்கைகளை மத்திய அரசு ரமலான் மாதத்தையொட்டி தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருந்தது. தற்போது போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை. எனவே பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் காஷ்மீரில் மீண்டும் தொடங்கிவிட்டன’ என்று கூறப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியதாவது:-



    காஷ்மீரில் பயங்கரவாதமும், வன்முறையும் இல்லாத நிலையை உருவாக்கிட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாகவே அதை தடுத்து நிறுத்த அனைத்து வித நடவடிக்கைகளையும் பாதுகாப்பு படையினர் மேற்கொள்ளும்படி உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

    கடந்த ஒரு மாதத்தில் பயங்கரவாதிகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியபோதிலும் பாதுகாப்பு படையினர் மிகவும் அமைதி காத்து முன்உதாரணமாகத் திகழ்ந்துள்ளனர். இதை நாடு முழுவதிலும் மக்கள் வரவேற்று உள்ளனர். முஸ்லிம் சகோதர, சகோதரிகளின் வேண்டுகோளை ஏற்று பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் ஒரு மாதம் நிறுத்தி வைக்கப்பட்டன. அமைதியை விரும்பும் அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து பயங்கரவாதிகளை தனிமைப் படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, காஷ்மீரில் அனந்தநாக், பாரமுல்லா மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் சில இடங்களில் வன்முறை கும்பலால் ரெயில் பெட்டிகள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் நேற்றுமுன்தினம் மாலை காஷ்மீரில் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. நேற்றும் ரெயில்கள் இயக்கப்படவில்லை.

    பயணிகள் மற்றும் ரெயில்வே ஊழியர்களின் பாதுகாப்பு கருதி ஸ்ரீநகர்-பட்காம், அனந்தநாக்-காஸிகுந்த் உள்ளிட்ட மார்க்கங்களில் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதாக ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    காஷ்மீர் மாநிலத்தில் கடந்த மாதம் 14 முறை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். 
    Next Story
    ×