என் மலர்
செய்திகள்

அசாமில் வெள்ளப் பெருக்கு - 4 லட்சம் பேர் பாதிப்பு
அசாமில் பெய்து வரும் பலத்த மழையால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 4 லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். #AssamFlood
கவுகாத்தி:
அசாம் மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஹோஜய், கிழக்கு கர்பி அங்லாங், மேற்கு கர்பி அங்லாங், கோலாகோட், கரிம்கஞ்ச், ஹைலகண்டி மற்றும் கச்சார் மாவட்டங்களில் உள்ள சுமார் 3.87 லட்சம் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். சுமார் 668 கிராமங்களில் உள்ள ஆயிரத்து 912 ஹெக்டேர் விளைநிலங்கள் மழையில் மூழ்கி சேதமடைந்துள்ளன. பல்வேறு நகரங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன.

கவுகாத்தி நகரின் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை பத்திரமாக மீட்டு 178 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பேரிடர் மீட்புக் குழுவினர் செய்து வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 500க்கு மேற்பட்டோர் வெள்ளத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். #AssamFlood
Next Story






