search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க. தலைவர் முகுல் ராய்க்கு கொலை வழக்கில் முன் ஜாமின் அளித்தது கொல்கத்தா ஐகோர்ட்
    X

    பா.ஜ.க. தலைவர் முகுல் ராய்க்கு கொலை வழக்கில் முன் ஜாமின் அளித்தது கொல்கத்தா ஐகோர்ட்

    கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பா.ஜ.க. தலைவர் முகுல் ராய்க்கு கொல்கத்தா ஐகோர்ட் இன்று நிபந்தனை முன் ஜாமின் அளித்துள்ளது. #MukulRoy #MrinalKantiSinghaRoy
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆட்சி செய்யும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்களில் முக்கியமானவராக முன்னர் இருந்தவர் முகுல் ராய்.

    அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான இருந்த இவர், முன்னர் மத்தியில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஆறுமாதங்கள் ரெயில்வே மந்திரியாகவும் பதவி வகித்தார். தலைமை மீது கொண்ட கருத்து வேற்றுமையால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பா.ஜ.க.வில் இணைந்தார். பின்னர், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில், முகுல் ராயின் அரசியல் குருவாக இருந்த மிரினால் கான்ட்டி சிங்கா ராய் என்பவரை திட்டமிட்டு கொலை செய்ததாக அவரது சகோதரி தொடர்ந்த வழக்கில் முகுல் ராய்க்கு கொல்கத்தா ஐகோர்ட் இன்று முன் ஜாமின் அளித்துள்ளது.
     
    கடந்த 8-6-2011 அன்று வடக்கு 24-வது பர்கானா மாவட்டத்துக்கு உட்பட்ட கஞ்ச்ரப்பாரா - ஹலிசாஹர் சாலை வழியாக வாகனத்தில் சென்ற மிரினால் கான்ட்டி சிங்கா ராய் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

    அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் மேல் சிகிச்சைக்காக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஓரளவுக்கு உடல்நிலை தேறிய அவரை வீட்டுக்கு அனுப்பி வைக்காமல் முகுல் ராயின் யோசனையின்படி கொல்கத்தாவில் உள்ள ஒரு லாட்ஜில் தங்க வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், லாட்ஜில் தங்கி இருந்த மிரினால் கான்ட்டி சிங்கா ராய், தொண்டை தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    அவரது மரணத்துக்கு தொண்டையில் இருந்த ரத்தக்கசிவு காரணமாக இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் மூலம் பின்னர் தெரிய வந்ததாகவும், அவரது மரணத்தில் முகுல் ராய்க்கு தொடர்பு இருப்பதாகவும் சந்தேகப்பட்ட மிரினால் கான்ட்டி சிங்கா ராயின் சகோதரி சோனாலி, தனது புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்து விட்டதால் கொல்கத்தா ஐகோர்ட்டின் உதவியை நாடினார்.

    இவ்விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என அவர் வழக்கு தொடர்ந்ததையடுத்து, இடைப்பட்ட காலத்தில் பா.ஜ.க.வில் இணைந்துவிட்ட முகுல் ராய் இந்த வழக்கில் தன்னை போலீசார் கைது செய்ய கூடாது என கொல்கத்தா ஐகோர்ட்டில் கடந்த ஜனவரி மாதம் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் இருந்ததால் அவரை கைது செய்ய ஐகோர்ட் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில், முகுல் ராயிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் காப்புறுதி பத்திரத்தை பெற்ற கொல்கத்தா ஐகோர்ட் அவருக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின் அளித்துள்ளது.

    இவ்வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றுவரும் வடக்கு 24-வது பர்கானா மாவட்டத்துக்கு உட்பட்ட பிஜப்பூர் போலீஸ் நிலையத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை ஆஜராக வேண்டும் என அவருக்கு முன் ஜாமின் அளித்த நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். #MukulRoy #MrinalKantiSinghaRoy
    Next Story
    ×