என் மலர்
செய்திகள்

2011-ல் எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து சர்ச்சையில் சிக்கியவர் போப்பையா
கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள போப்பையா ஏற்கனவே 2009ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை சபாநாயகராக பணியாற்றியிருக்கிறார். #KGBopaiah #karnatakaassembly
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் நிலவும் அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் நாளை சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஆட்சியமைக்க 112 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், 104 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட பா.ஜ.க.வை ஆட்சிப்பொறுப்பில் அமர்த்தியதை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. அதேசமயம் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசை வீழ்த்த ஆயத்தமாகி வருகிறது.
இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்காக தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போப்பையாவை ஆளுநர் நியமித்துள்ளார். பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான இவர் ஏற்கனவே 2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை சபாநாயகராக பொறுப்பில் இருந்துள்ளார். மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
2011ம் ஆண்டு எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்தார் போப்பையா. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தகுதி நீக்கத்தை உறுதி செய்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் அதனை ரத்து செய்தது. எடியூரப்பா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற ஏதுவாக, எதிர்ப்பு எம்.எல்.ஏ.க்கள் 16 பேரை விரைவாக தகுதிநீக்கம் செய்ததாக சபாநாயகர் போப்பையாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #KGBopaiah #karnatakaassembly
Next Story






