search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் கொடுமை பற்றி பேச முழு சுதந்திரம் உள்ளது: நடிகை பார்வதிக்கு சசிதரூர் எம்.பி. ஆதரவு
    X

    பெண் கொடுமை பற்றி பேச முழு சுதந்திரம் உள்ளது: நடிகை பார்வதிக்கு சசிதரூர் எம்.பி. ஆதரவு

    பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் இருந்தால் அதை கண்டித்து பேச முழு சுதந்திரம் என்று நடிகை பார்வதிக்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவையொட்டி நடைபெற்ற விவாத நிகழ்ச்சி ஒன்றில் நடிகை பார்வதி பங்கேற்றார். அப்போது மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக உள்ள மம்முட்டி நடித்த கசபா என்ற சினிமாவில் பெண்களுக்கு எதிரான வசனங்கள் இடம்பெற்று உள்ளதாகவும் அது தன்னை அதிர்ச்சி அடைய வைத்ததாகவும் கருத்து தெரிவித்து இருந்தார்.

    இதைத் தொடர்ந்து நடிகை பார்வதியின் பேஸ்-புக்கில் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து பலரும் கருத்துக்களை பதிவு செய்தனர். ஏராளமான மம்முட்டி ரசிகர்கள் நடிகை பார்வதிக்கு எதிராக ஆபாசமாகவும், கொலை மிரட்டல் விடுத்தும் கருத்துக்களை பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது பற்றி போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத்பெக்ராவை சந்தித்து பார்வதி நேரிலும் புகார் செய்தார்.

    டி.ஜி.பி. உத்தரவுப்படி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நடிகை பார்வதிக்கு ஆபாசமாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மிரட்டல் விடுத்ததாக பாலக்காடு அருகே உள்ள வடக்கன்சேரியைச் சேர்ந்த பிரிண்டோ(வயது23) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    மம்முட்டி ரசிகரான இவர் மீது கொலை மிரட்டல், அவதூறாக கருத்து பதிவு செய்தல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போல மேலும் பலரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதற்கிடையில் நடிகை பார்வதிக்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது:-



    தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி உள்ள மம்முட்டி நடித்த கசபா படத்தை நான் பார்க்கவில்லை. ஆனால் அந்த படத்தில் பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் இருந்தால் அதை கண்டித்து பேச முழு சுதந்திரம் உள்ளது.

    அதற்காக கொலை மிரட்டலோ, பலாத்கார மிரட்டலோ விடுப்பது ஏற்றுக்கொள்ள தக்கதல்ல. நடிகை பார்வதி கருத்துக்கு எனது முழு ஆதரவு உண்டு. மலையாள மூத்த நடிகர்களும் அவரை ஆதரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×