search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    எங்கள் ஆசிரியர்
    X

    எங்கள் ஆசிரியர்

    • எங்களுக்கு சாமாசார் என்று ஒரு ஆசிரியர் இருந்தார். ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் ஓர் உதாரணம்.
    • எங்கள் நாகூரில் அவர் ஒரு முக்கியப்புள்ளி. எல்லார் வீட்டு விழாக்களிலும் அவருக்கே முதன்மை. ஏன் அப்படி?

    செப்டம்பர் 5 டாக்டர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் பிறந்தநாள். அவர் விரும்பியவாறு இது ஆசிரியர் நாளாக மலர்ந்துள்ளது.

    ஆசிரியராகத் தொடங்கிக் குடியரசுத் தலைவர் பொறுப்பு வரை அனைத்தையும் பொறுப்புடன் நிறைவேற்றிய பெருந்தகை அவர்.

    'வருங்கால இந்தியா வகுப்பறையில்தான் உள்ளது' என்று கல்வியின் பெருமையைக் கவின்மிக உரைத்தவர்.

    என் ஆசிரியர்கள் நினைவுக்கு வருகிறார்கள். இரண்டாம் வகுப்பு ஆசிரியர் அருமையாகப் பாடம் நடத்துவார். இனிய கருத்துகளை எளிமையாக விளக்கும் ஆற்றல் உடையவர். மதியம் உணவு உண்ட களைப்பில் சற்றே அவர் கண்ணயர்வார். இந்தப் பழக்கத்தை மட்டும் அவரால் விடமுடியவில்லை. இதனால் தலைமையாசிரியரிடம் பலமுறை திட்டுவாங்கியிருந்தார்.

    ஒருநாள் மதியம் சட்டாம் பிள்ளையான என்னை ஆத்திசூடி சொல்ல வைத்துவிட்டுத் தூங்கிப்போனார். என்னிடம் 'அந்த ஹச்.எம் வந்தார்னா என்னை எழுப்பிவிடுடா' என்று சொல்லியிருந்தார்.

    தலைமையாசிரியர் இவரைக் கையுங்களவுமாகப் பிடிக்கவேண்டுமென்றே வருவது தெரிந்தது. இரண்டு மூன்றுமுறை எழுப்பினேன். அவர் விழிப்பதாயில்லை.

    ஓங்கி ஒரு தட்டு தட்டி எழுப்பினேன். அவர் விழித்தெழவும் தலைமையாசிரியர் வகுப்பில் நுழையுவும் சரியாக இருந்தது. தலைமையாசிரியர் சினத்துடன், 'என்னாய்யா பண்ணிக்கிட்டு இருக்கீங்க' என்று பொறிந்தார்.

    எங்கள் ஆசிரியர் கவலையே படாமல், "ஒன்னுமில்லே சார், சிங்கமும் சுண்டெலியும் கதை சொன்னேனா, சிங்கம் எப்படித் தூங்கும்னு பையங்க கேட்டாங்க. அதைத்தான் செஞ்சு காட்டிகிட்டு இருந்தேன். நீங்களும் கரெக்டா வந்துட்டீங்க." என்ற சொல்லிச் சமாளித்தார்.

    பையன்களாகிய நாங்கள் மிகவும் ரசித்தோம்.

    எங்களுக்கு சாமாசார் என்று ஒரு ஆசிரியர் இருந்தார். ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் ஓர் உதாரணம்.

    எங்கள் நாகூரில் அவர் ஒரு முக்கியப்புள்ளி. எல்லார் வீட்டு விழாக்களிலும் அவருக்கே முதன்மை. ஏன் அப்படி?

    மாணவர்களுக்கு அவர் ஆசான் மட்டுமல்ல. ஆலோசகர் மற்றும் வழிகாட்டி.

    மேலே எவ்வளவு படித்தபின்னும் அவரிடம் வந்து யோசனை கேட்டு, அதன்படி முன்னாள் மாணவர்கள் நடப்பார்கள்.

    உடல் நலமில்லாமல் இருப்போருக்கு அவர் மருத்துவ ஆலோசகர், பள்ளிமுடிந்து அவர் தெருவில் நடந்து போகும்போது அழைத்துக் காட்டுவார்கள்.

    அவர் நாடி பிடித்துப் பார்ப்பார். "உடனே ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போங்க" என்பார். நோயாளி பிழைப்பார்.

    சில பேர் நாடி பார்த்த பின் "ரெண்டு நாள் பார்த்துட்டு அப்புறமா ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போகலாம்" என்று சொல்லுவார். அந்த ரெண்டு நாளில் நோயாளி பரமபதம் அடைந்து விடுவார்.

    நிலை உணர்ந்து கருத்துச்சொல்லி உதவுவார். ஊர் மக்கள் அவரிடம் உயிரையே வைத்திருந்தனர்.

    சாமிநாத அய்யர் என்ற அவர் ஒவ்வொரு நாளும் நாகூர் தர்காவுக்குப்போவார். அவர் போவதை பார்த்து வெற்றிலைப் பாக்குக் கடை உசேன் ராவுத்தர் வெற்றிலை சீவல் எடுத்து பொட்டலம் கட்டி வைப்பார்.

    அவர் திரும்பி வரும்போது தெருவில் இறங்கி வந்து அவரிடம் பணிவோடு வழங்குவார். சாமாசார் பையில் கைவிடுவார், காசுகொடுக்க. உசேன் ராவுத்தர் "போயிட்டு வாங்க சார்" என்று வழிஅனுப்புவார். இந்த நாடகம் ஒவ்வொருநாளும் நடப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

    கணவர் அனுப்பிய பணத்தை சரியாக தரவில்லை என்று போஸ்ட்மேன் மீது குறை சொல்லுகிறார் ஓர் இஸ்லாமிய மாது. சாமாசார் அதை கேட்டு, அந்த போஸ்ட்மேனை வரவழைத்து, அவரைக் கண்டித்து பணத்தை வாங்கி அம்மையாரிடம் கொடுத்து அனுப்பி விட்டு, போஸ்ட் மாஸ்ட்டருக்குத் தெரிஞ்சா உன் வேலையே போய்விடும். இனிமே இப்படிச் செய்யாதே என்று எச்சரித்தார்.

    ஊரில் முக்கியமானவராக ஆசிரியர் இருந்திருக்கிறார் என்பதற்கு இந்த சாமாசார் ஓர் உதாரணம்.

    ஆசிரியர் என்பவர் எல்லோராலும் மதித்து போற்றப்படுபவர். எனவே ஆசிரியர்கள் பொறுப்புணர்ந்து நடப்பது அவசியம்.

    ஆசிரியர் என்பவர் பணியாற்றுபவர் அல்லர். அவர் சிறந்தப் பொறுப்பினை வகுத்து நிறைவேற்றுபவர்.

    -புலவர் சண்முகவடிவேல்

    Next Story
    ×