என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா 2-வது அலை
    X
    கொரோனா 2-வது அலை

    கொரோனா 2-வது அலையும்... பொதுமக்களின் அச்சமும்...

    நமது நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள்தான் இருந்தது. சில மாநிலங்களில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், பேரணி போன்ற நிகழ்வுகள்தான் கொரோனா பரவல் இன்று உச்சத்தை தொட காரணமாக அமைந்து விட்டது.
    2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுமத்ரா தீவில் உருவான ஆழிப்பேரலை என்ற சுனாமி உலக நாடுகள் பலவற்றின் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை வாரிச்சுருட்டி சென்றது. இதைப்போல் இனியொரு பேரிடர் ஏற்படப்போவதில்லை என்று உலகம் முழுவதும் மக்கள் எண்ணி இருந்தனர். அவர்களது எண்ணத்தில் மண்ணை அள்ளிப்போடும் வகையில் கொரோனா என்ற பெயரில் மீண்டும் ஒரு பேரிடர் உருவாகி உலக நாடுகளை கதிகலங்க செய்துள்ளது.

    சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு உருவானதாக கூறப்படும் இந்த நோய் தொற்று உலகம் முழுவதும் வலம் வந்து மனித உயிர்களை கொத்து கொத்தாக காவு வாங்கி வருகிறது. இந்த வைரசின் முதல் அலை கடந்த ஆண்டு உலக நாடுகள் முழுவதும் வீசியது. இதில் அதிகம் பாதிப்புக்குள்ளான நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 3-வது இடத்திலும் இருந்தது. நாளுக்கு நாள் நமது நாட்டில் பரவல் வேகம் அதிகரித்ததால் 3-வது இடத்தில் இருந்த நாம் இன்று இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளோம்.

    நமது நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள்தான் இருந்தது. சில மாநிலங்களில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், பேரணி போன்ற நிகழ்வுகள்தான் கொரோனா பரவல் இன்று உச்சத்தை தொட காரணமாக அமைந்து விட்டது. அதாவது, கொரோனா வைரஸ் மீது மக்களுக்கு இருந்த அச்சம் நீங்கியதின் விளைவாக முககவசம் அணிவதை தவிர்த்தது, சமூக இடைவெளியை மறந்தது. இதன் காரணமாக உறங்கிக்கிடந்த கொரோனா மக்களை பதம்பார்க்க மீண்டும் வீறு கொண்டு எழுந்துள்ளது. அது கடந்த சில நாட்களாக 2-வது அலையாக வெகுவேகமாக பரவி வருகிறது.

    டெல்லி, மராட்டியம் போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரிகளில் இடம் இல்லாமல் பிளாட்பாரங்களில் கிடத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் போதிய அளவு கிடைக்காமல் கொத்து, கொத்தாக உயிர்ப்பலி ஆவோரின் எண்ணிக்கையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால் சுடுகாடுகளில், மின் மயானங்களில் கொரோனாவால் இறந்த உடல்களை எரியூட்ட முடியவில்லை. சில மாநிலங்களில் பிணங்கள் குவியல், குவியலாக எரியூட்டப்படுகின்றன.

    ஆனால் அப்படி ஒரு நிலைமை தமிழகத்தில் இல்லை. ஆனாலும் நமக்கும் மற்ற மாநிலங்களின் நிலை வந்து விடக்கூடாது என்பதே மருத்துவர்களின் வேண்டுதலாக உள்ளது.

    கொரோனா வைரஸ்

    அந்த மருத்துவர்கள் கூறுகையைில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அதிலும் நாள்தோறும் பாதிப்பு உள்ள மாவட்டங்களில் குமரி மாவட்டமும் ஒன்றாக இருக்கிறது. தற்போது 2-வது அலையாக வீசும் இந்த கொரோனா அதிக வீரியம் மிக்கதாகவும், பரவல் வேகம் அதிகம் உள்ளதாகவும், இளம் வயதினரை அதிகம் பாதிக்கக்கூடியதாகவும் உள்ளது. நோய் தொற்று ஏற்பட்டவுடன் நுரையீரலை வேகமாக பாதிப்பதுடன் இறப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக இருக்கிறது என்கிறார்கள்.

    மேலும் அவர்கள் கூறுகையில், முதல் அலையில் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரசுக்கும்,. 2-வது அலையில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசுக்கும் வேறுபாடு உள்ளன. முதல் அலையில் சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டு அதன்பிறகுதான் வைரஸ் நுரையீரலை பாதிக்கும். அதனால் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சினை உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்கள் அதிக பாதிப்புக்கு ஆளாகி இறக்க நேரிட்டது. ஆனால் புதிய வகை வைரஸ் எவ்வித அறிகுறியும் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய திறன் கொண்டவை. நோய் தொற்று ஏற்பட்ட ஒன்றிரண்டு நாட்களுக்குள்ளே, நோயாளிகளின் நுரையீரலில் குறிப்பிட்ட சதவீத பாதிப்பை இந்த வைரஸ் ஏற்படுத்தி விடுகின்றன. எனவே லேசான பாதிப்பு ஏற்பட்ட உடன் தொற்று கண்டறியப்பட்டால் அவரை இந்த நோயில் இருந்து எளிதாக காப்பாற்றி விட முடியும். பாதிப்பு அதிகம் ஆனபிறகு இளம் வயதினராக இருந்தாலும் அவர்களை காப்பாற்றுவது கடினமானது என்கின்றனர்.

    இதற்கு உதாரணமாக சிலவற்றை இங்கே குறிப்பிடலாம். ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 32 வயது வாலிபர், 44 வயது ஆண் போன்றவர்கள் வேறு நோய் பாதிப்பு எதுவும் இல்லாத நிலையில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அதற்கு காரணம், நோய் நுரையீரலை அதிக அளவு பாதித்த பிறகு அவர்கள் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்துள்ளனர். அதனால் அவர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    அதேபோல் கர்ப்பிணிகளும். சிறுவர்களும் 2-வது பரவலில் சிக்கி வருவது நமக்கு அதிர்ச்சி அளிக்க கூடிய ஒன்றுதான். கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தபிறகு இறந்துபோனார். மற்றொரு கர்ப்பிணி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவர்கள் ஏராளமானோரும் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இவ்வாறு சிகிச்சைக்கு அனுமதிப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 200-ஐ தாண்டுகிறது. குமரி மாவட்டத்தில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டி விட்டது. இறந்தவர்களின் எண்ணிக்கையோ 400-ஐ நெருங்குகிறது. பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அரசு ஆஸ்பத்திரி மட்டும் அல்லாமல் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு பரவி வரும் கொரோனா வைரஸ் வருகிற மே மாதம் 2-வது வாரத்தில் உச்சத்தை தொடும். கொரோனா விதிகளை பின்பற்றி உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர் டாக்டர்கள்.

    அரசு கட்டுப்பாடுகளை விதித்த போதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×