search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை
    X

    கரூர் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை

    கரூர் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முதல் சுற்று முடிவின்படி 19,663 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதியில் 6,78,373 ஆண்கள், 7,08,196 பெண்கள் மற்றும் 67 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 13,86,636 வாக்காளர்கள் உள்ளனர்.

    இந்த தொகுதியில் கரூர், கிருஷ்ணராயபுரம், வேடசந்தூர், விராலிமலை, மணப்பாறை, அரவக்குறிச்சி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

    அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் தம்பிதுரை, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, அ.ம.மு.க. வேட்பாளர் பி.எஸ்.என்.தங்கவேல், மக்கள் நீதி மய்யம் கட்சியில் டாக்டர் ஹரிகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கருப்பையா உள்பட மொத்தம் 42 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 10,97,024 வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்திருந்தனர். ஆண்கள் 5,32,760 பேரும், பெண்கள் 5,64,233 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 31 பேரும் தங்களது வாக்கினை பதிவு செய்திருந்தனர். இது 79.11 சதவீதமாகும்.

    வாக்குப்பதிவு முடிந்ததும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான கரூர் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

    இன்று காலை வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

    அடுத்ததாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 14 மேஜைகள் போடப்பட்டிருந்தன. ஒரு உதவியாளர், ஒரு நுண் பார்வையாளர் மற்றும் உதவியாளர் மற்றும் பணியாளர்கள் பணியில் இருந்தனர்.

    முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு வருமாறு:-

    ஜோதிமணி (காங்கிரஸ்)-35,110

    தம்பிதுரை (அ.தி.மு.க.)-15,447

    முதல் சுற்று முடிவின்படி 19,663 வாக்குகள் வித்தியாசத்தில் ஜோதிமணி முன்னிலையில் இருந்தார்.
    Next Story
    ×