search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவொற்றியூரில் சவப்பெட்டியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
    X

    திருவொற்றியூரில் சவப்பெட்டியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

    • மாணவியின் உடல் வைக்கப்பட்டு இருந்த குளிர்சாதன சவப்பெட்டியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது.
    • 3 பெண்கள் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் சாலையை சேர்ந்தவர் நந்தினி. இவருடைய மகள் அபிநயா (வயது16). ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த வாரம் காது வலிக்காக திருவொற்றியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அபிநயாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவி பலியானார்.

    நேற்று மதியம் மாணவி அபிநயாவின் உடல் இறுதி சடங்கிற்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது மாணவியின் உடல் வைக்கப்பட்டு இருந்த குளிர்சாதன சவப்பெட்டியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது.

    இதில் அருகில் நின்று கொண்டு இருந்த மாணவியின் உறவினர் அஜித் (வயது19) உள்பட 20 பேர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அஜித் பரிதாபமாக இறந்தார். மேலும் 3 பெண்கள் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தனர். இதனால் அருகில் இருந்தவர்கள் பதட்டம் அடைந்தனர்.

    அப்போது உடனடியாக வாலிபர் ஒருவர் முதல் உதவி சிகிச்சை அளித்து 2 பெண்ணின் உயிரை காப்பாற்றிய தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

    மின்சாரம் தாக்கியதில் சவுமியா, சுந்தரி உள்ளிட்டோர் மயங்கி விழுந்ததும் அவர்களை உடனடியாக வீட்டில் உள்ள மற்றொரு அறைக்கு தூக்கிச்சென்று வாய்மூலம் மூச்சுக்காற்றை ஊதியதாக தெரிகிறது. இதன் பின்னர் முதல் உதவி சிகிச்சை அளித்ததும் அவர்கள் நிலைமை ஓரளவு சீரானது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சோகத்திலும் விரைந்து செயல்பட்டு முதல் உதவி சிகிச்சை அளித்து காப்பாற்றிய அந்த வாலிபரை பொதுமக்கள் பாராட்டினர்.

    Next Story
    ×