search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்களில் இனிமேல் சமஸ்கிருதம் வேண்டாம், தமிழ் மொழியே  போதும் என்று அண்ணாமலை கூறுவாரா?: அமைச்சர் பொன்முடி கேள்வி
    X

    கோவில்களில் இனிமேல் சமஸ்கிருதம் வேண்டாம், தமிழ் மொழியே போதும் என்று அண்ணாமலை கூறுவாரா?: அமைச்சர் பொன்முடி கேள்வி

    • துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடத்த அனைவருக்கும் வேந்தர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
    • பல்கலைக்கழகங்களில் சிண்டிகேட் கூட்டம் கடைசியாக கடந்த 20.4.2023-ல் நடைபெற்றது.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வரலாறு தெரியாமல் அரைகுறையாக படித்ததை வைத்து, நடப்பு நிகழ்வுகள் தெரியாமல் பேட்டி அளித்து வருகிறார். அண்ணாமலை விரும்பினால் அவர் சென்னையில் எந்த இடத்தில், எப்போது சந்தித்து விவாதிக்க வேண்டும் என்று சொல்கிறாரோ, அங்கு நான் அவரோடு கலந்து கொண்டு விவாதிக்க தயாராக உள்ளேன். வருகிற 5-ந் தேதி துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடத்த அனைவருக்கும் வேந்தர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் மும்மொழி கல்வி திட்டம் குறித்து விவாதிப்பதற்காக அனைவரும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இணை வேந்தரான எனக்கோ, தமிழக அரசுக்கோ இதுவரை இது தொடர்பாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அண்ணாமலை பேசும்போது இது எல்லாம் அரசுக்கு தெரியும் என்று தவறான தகவலை தெரிவித்து வருகிறார். பல்கலைக்கழகங்களில் சிண்டிகேட் கூட்டம் கடைசியாக கடந்த 20.4.2023-ல் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் சிண்டிகேட் உறுப்பினர் பரந்தாமன் கலந்து கொள்ளவில்லை.

    ஆனால் அண்ணாமலை தவறான தகவலை தெரிவித்து வருகிறார்.இந்த கூட்டத்திற்கு பின்பு தான் அந்த பொறுப்பில் சிண்டிகேட் உறுப்பினராக அவரை இணைத்துக் கொண்டார். தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் எங்களுடைய பிரதான நோக்கமாக உள்ளது. எப்போதும் தமிழகத்தில் இரு மொழி கொள்கையை நாங்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் பல மொழிகளை படிக்கும் போது மாணவர்கள் தேர்வு எழுதுவதில் பல சங்கடங்கள் ஏற்படுகிறது. அவற்றை தவிர்ப்பதற்காகத்தான் இரு மொழி கொள்கையை நாங்கள் கட்டாயப்படுத்தி வருகிறோம். சமஸ்கிருதம், இந்தி படித்தால் அதிக ஊக்கத்தொகை கொடுக்கப்படும் என்று புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. வேறு எந்த மாநில மொழிகளுக்கும் இந்த சலுகை அறிவிக்கப்படவில்லை. தமிழுக்கு எந்த சலுகையும் புதிய கல்விக் கொள்கையில் இடம் பெறவில்லை. ஆனால் அண்ணாமலை தமிழுக்கு நாங்கள் என்ன செய்து விட்டோம் என்று எங்களை பார்த்து கேட்கிறார்.

    தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை தி.மு.க. அரசு தொடர்ந்து அளித்து வருகிறது. கோவிலில் சமஸ்கிருதம் வேண்டாம் தமிழ் போதும் என்று அண்ணாமலை சொல்வாரா? இவர்கள் நோக்கம் எல்லாம் இந்தியாவில் சமஸ்கிருதமும், இந்தியும் திணிக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். சி.பி. எஸ்.இ. பாடத்திட்டத்தில் கூட ஆங்கிலம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழ்ெமாழிக்கு எந்த முன்னுரிமையும் அளிக்கப்படவில்லை. 3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இவ்வாறு பொது தேர்வு வைப்பதால், அதிக அளவு மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தல் ஏற்படும். இதனை தவிர்க்கவே நாங்கள் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். கல்வி வளர்ச்சியில் திராவிட மாடல் ஆட்சியில் சாதனைகள் அதிகம். கடந்த 2 ஆண்டுகளில் பல சாதனைகளை தி.மு.க. அரசு செய்து வருகிறது. ஆனால் அண்ணாமலை அவற்றையெல்லாம் மறந்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார். அண்ணாமலை விரும்பினால் நான் அவருடன் சென்னையில் ஒரே இடத்தில் பட்டிமன்றம் நடத்தவும் தயாராக இருக்கிறேன். எல்லாவற்றையும் தி.மு.க. சந்திக்க தயாராக உள்ளது. இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

    Next Story
    ×