search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தம் அருகே தோட்டத்தில் கூட்டமாக வரும் காட்டெருமைகளால் பீதி
    X

    குட்டுப்பட்டி தென்னந்தோப்பில் புகுந்த காட்டெருமைகளை படத்தில் காணலாம்

    நத்தம் அருகே தோட்டத்தில் கூட்டமாக வரும் காட்டெருமைகளால் பீதி

    • திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றிலும் சிறுமலை தொடர்ச்சி உள்ளிட்ட பல்வேறு மலைகளும், குன்றுகளும் உள்ளது.
    • காட்டெருமைகள் தண்ணீர் பருகுவதற்கு ஆங்காங்கே மலைகளை சுற்றி குடிநீர் தொட்டிகள் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் அழகர் மலை, கரந்த மலை, சிறுமலை தொடர்ச்சி உள்ளிட்ட பல்வேறு மலைகளும், குன்றுகளும் உள்ளது.

    இந்த மலைகளை சுற்றி மூங்கில்பட்டி, பட்டணம் பட்டி, காசம்பட்டி, வத்திபட்டி, லிங்கவாடி, வேம்பரளி, மலையூர், முளையூர், உலுப்பகுடி, குட்டுப்பட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் மாமரங்கள், சோளம், கம்பு, நிலக்கடலை, பயறு வகைகள் ஏற்கனவே பயிரிடப்பட்டுள்ளது. தற்போது மலைகளில் இருந்து ஆங்காங்கே காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக மலை இறங்கி வருகிறது.

    குட்டுப்பட்டி பகுதியில் இறங்கிய 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் அந்தப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பயிர் வகைகளையும், மர வகைகளை ஒடித்து சேதப்படுத்தியது. கூட்டம் கூட்டமாக வரும் காட்டெருமைகளை விவசாயிகள் விரட்ட முடியாமல் பரிதவிக்கின்றனர். இது குறித்து குட்டுப்பட்டியை சேர்ந்த விவசாயி பழனியப்பன் (45) தெரிவிக்கையில், வருடந்தோறும் காட்டெருமைகள் தொந்தரவுகள் அதிகரித்து வருகிறது.இதற்கு வனத்துறை நிர்வாகம் தான் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் தடுப்பு வேலிகளும் அமைக்க வேண்டும்.இது தவிர காட்டெருமைகள் தண்ணீர் பருகுவதற்கு ஆங்காங்கே மலைகளை சுற்றி குடிநீர் தொட்டிகள் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இரவு நேரத்தில் விவசாயிகள் காவலுக்கு கூட போக முடியவில்லை. அச்சத்துடன் இருக்கிறார்கள். இதற்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும் உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என்றார்.

    Next Story
    ×