search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழைசேதம் குறித்து தகவல் தெரிவிக்கலாம்
    X

    மழைசேதம் குறித்து தகவல் தெரிவிக்கலாம்

    • மழைசேதம் குறித்து அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.
    • இந்த தகவலை விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 1.10.2022 முதல் தொடங்கி உள்ளது. தற்பொழுது வடகிழக்கு பருவமழை காலமாக உள்ளதால் கடந்த 1 மாதமாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களில் உள்ள கண்மாய், குளம், குட்டைகள் முழுவதுமாக நீர் நிரம்பியுள்ளது. இந்த நேரத்தில் வடகிழக்கு பருவ மழையால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழும் பொது மக்கள் பாதுகாப்புடன் இருப்பதற்கு விருது நகர் மாவட்ட நிர்வாக த்தால் பாதுகாப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பருவ மழையால் தங்கள் பகுதிகளில் ஏற்படும் சேதங்கள் குறித்து விருதுநகர் மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறை அவசர கட்டுபாட்டு அறை 1077 என்ற தொலைபேசி எண்ணிற்கு 24 மணிநேரமும் தகவல் தெரிவிக்கலாம்.

    அருப்புக்கோட்டை வட்டம், பாலையம் பட்டி மேலத்தெருவை சேர்ந்த சரத்குமார் என்பவரின் குழந்தைகள் சித்தார்த் (வயது 8) மற்றும் சந்திரமணி (10) ஆகியோர் அந்த ஊரில் உள்ள ஊரணியில் குளிக்க சென்ற போது தவறி விழுந்ததில் இறந்து விட்டனர். இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கண்மாய், குளம் மற்றும் குட்டைகள் முழுவதுமாக நீர் நிரம்பியுள்ளதால் குளிப்பதற்கு செல்ல வேண்டாம்.

    தங்கள் குழந்தைகளை கண்மாய்கள், குளங்கள், ஓடைகள், ஊரணிகள் மற்றும் குட்டைகள் இருக்கும் இடங்களுக்கு குளிப்பதற்கோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்கோ அனுப்ப வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×