search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணன்  மரணம்
    X

    ராதாகிருஷ்ணன் எம்.பி.

    முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணன் மரணம்

    • முன்னாள் அ.தி.மு.க. எம்.பி. ராதாகிருஷ்ணன் திடீரென மரணமடைந்தார்.
    • அவருக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி- அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

    சிவகாசி

    சிவகாசியில் முன்னாள் அ.தி.மு.க. எம்.பி. ராதா கிருஷ்ணன் நேற்று திடீரென மரணமடைந்தார்.

    சிவகாசி அருகே உள்ள வடபட்டியை சேர்ந்தவர் டி.ராதாகிருஷ்ணன் (வயது 67). 2014-ம் ஆண்டு நடந்த விருதுநகர் நாடாளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இவர் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் செயலாளராகவும், 3 முறை சிவகாசி யூனியன் தலைவராகவும் இருந்துள்ளார். அ.தி.மு.க. வில் பல்வேறு பதவிகள் வகித்த இவர், தற்போது விருதுநகர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளராக இருந்தார்.

    ராதாகிருஷ்ணனுக்கு நேற்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    அவரது உடலுக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலா ளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, அ.தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் கருப்பசாமி, வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    தி.மு.க. மாநில வர்த்தக அணி துணைத்தலைவர் வனராஜா, சிவகாசி தி.மு.க. ஒன்றிய செயலாளரும், யூனியன் துணைத்தலை வருமான விவேகன்ராஜ், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.ஏ.சந்திரன், விருதுநகர் அ.ம.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் பயில்வான்சந்தோஷ்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் சி.எம்.ராஜா உட்பட அரசியல் கட்சி நிர்வாகிகளும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    ராதாகிருஷ்ணனின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான சிவகாசி அருகே உள்ள வடபட்டி மேலூர் கிராமத்தில் இன்று மாலை நடக்கிறது.

    ராதாகிருஷ்ணனின் மகன் தர்மராஜாவை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.

    Next Story
    ×