

வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட மகாராஜபுரம் பகுதியில் வத்திராயிருப்பு தாசில்தார் உமா மகேஸ்வரி, வட்ட வழங்கல் அதிகாரி செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 2 டன் ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது.
இது தொடர்பாக அந்த வாகனத்தை ஓட்டி வந்த விஜயனிடம் விசாரணை நடத்தினர். இதில் ரேசன் அரிசியை அவர் கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை தாசில்தார் மற்றும் அதிகாரிகள் பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் ரேசன் அரிசி கடத்திய புகாரின் பேரில் விஜயனை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.