search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூர் அருகே கழிப்பறை வசதி இல்லாத கிராம மக்கள்
    X

    கூடலூர் அருகே கழிப்பறை வசதி இல்லாத கிராம மக்கள்

    • திறந்தவெளியை பயன்படுத்தும் அவல நிலை காணப்படுகிறது.
    • 10 வீடுகளில் மட்டுமே கழிப்பறை வசதி உள்ளது.

    கூடலூர்,

    நாடு முழுவதும் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்கும் பொருட்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள் வீடுகள் தோறும் கழிப்பறைகள் கட்ட தலா ரூ.15 ஆயிரம் நிதி ஒதுக்கியது. இதன் காரணமாக பெரும்பாலான கிராமங்களில் கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், இத்திட்டம் மக்களை முழுமையாக சென்றடையாத கிராமங்களும் உள்ளது. கூடலூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஓவேலி பேரூராட்சி சட்டப்பிரிவு-17 வகை நிலத்தின் கீழ் வருவதால் மக்களுக்கு தேவையான அடிப்படை வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான கிராமங்களில் கழிப்பறை வசதிகள் பூர்த்தி செய்யப்படவில்லை. ஆத்தூர் கிராமத்தில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அனைவரும் தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். கிராமத்தில் வசிக்கும் மக்கள் வெளியிடங்கள், கிராமங்களுக்கு உடனடியாக செல்ல போக்குவரத்து வசதி இல்லை. இதேபோல் தொலைபேசி அலைவரிசை சேவையும் எட்டாக்கனியாகவே உள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் வாரத்துக்கு ஒருமுறை பல கிலோமீட்டர் தூரம் கால்நடையாக நடந்து காந்திநகர் என்ற இடத்திற்கு வருகின்றனர். பின்னர் அங்கிருந்து வாகனத்தில் கூடலூருக்கு வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். அடர்ந்த வனம் மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் ஆத்தூர் கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 10 வீடுகளில் மட்டுமே கழிப்பறை வசதி உள்ளது. ஆனால் மீதமுள்ள வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்படவில்லை. இதுதவிர மகளிர் மட்டும் பயன்படுத்தும் வகையில் பேரூராட்சி மூலம் பொதுகழிப்பறை கட்டப்பட்டு உள்ளது. திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர் இதனால் பெண்கள் பொதுகழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், ஆண்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. அப்பகுதியில் ஓடும் ஆற்றின் கரையோரம் திறந்தவெளியை இயற்கை உபாதை கழிக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீடுகளுக்கும் கழிப்பறை கட்டி தர வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த பகுதியில் ஓடும் ஆற்றின் நீரையே கூடலூர் பகுதி மக்களுக்கு குடிநீராகவும் வழங்கப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் ஆத்தூர் பகுதி கிராம மக்களுக்கு கழிப்பறை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    Next Story
    ×