search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரமடையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்
    X

    காரமடையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்

    • காரமடை நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை என கிராம மக்கள் சார்பில் கூறப்படுகிறது.
    • போலீசார் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ‌‌

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளது.

    இந்த வார்டு மக்களுக்கு மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி அருகில் உள்ள பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து அதே பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்தில் சுத்திகரித்து படுகிறது.

    ‌‌

    அதன் பின்னர் அங்கிருந்து குழாய்கள் மூலம் ஒவ்வொரு வார்டுகளிலும் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி குழாய்கள் மூலம் முறை வைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இதில் காரமடை நகராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம் 1, செல்வபுரம்2, இம்மானுவேல் நகர், சத்தியசாய் நகர், சிவாஜி நகர், காமாட்சி அம்மன் நகர், புத்தர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 600க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

    இப்பகுதி மக்களுக்கு காரமடை நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை என கிராம மக்கள் சார்பில் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக இப்பகுதி மக்கள் நகராட்சி ஆணையாளர் பால்ராஜ் மற்றும் தலைவர் உஷா வெங்கடேஷ் ஆகியோரிடம் தொடர்ந்து புகார் கோரி வந்துள்ளனர். ஆனால் இதுவரை இப்பகுதியினருக்கு குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே காலி குடங்களுடன் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ‌‌

    ஆனால் பொதுமக்கள் தங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும். இல்லையெனில் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நகராட்சி ஆணையாளர் பால்ராஜ் மற்றும் வார்டு உறுப்பினர் ராம்குமார் ஆகியோர் வந்து போராட்டத்தில் ஈடுபட்டி ருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் நாளைக்கு குடிநீர் வழங்கப்படும் என ஆணையாளர் பால்ராஜ் கூறியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே சுமார் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×