search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் 39 பன்றி பண்ணைகளில் கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு
    X

    கோவையில் 39 பன்றி பண்ணைகளில் கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு

    • 10 கிலோ மீட்டருக்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட் டுள்ளது.
    • எச்சங்கள், மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    கோவை,

    நீலகிரி மாவட்டம் முதுமலைப்பகுதியில் காட்டுப்பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இறந்த காட்டுப்பன்றிகளை ஆய்வு செய்ததில், ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து, நீலகிரியில் பன்றிகளை விற்பனைக்காக வெளியில் கொண்டு செல்ல தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் வேகமாக பரவும் தன்மை கொண்டது.

    மேலும், ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டருக்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட் டுள்ளது.

    வளர்ப்பு பன்றிகளுக்கு இதுவரை எந்தவித பாதிப்புகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கேரள அரசு பன்றிகளை உயிருடன் அல்லது இறைச்சியாக கொண்டு செல்ல வரும் 16-ந் தேதி வரை தடை விதித்துள்ளது.

    நாகலாந்திற்கு கோவையில் இருந்து அதிகளவில் பன்றிகள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கோவை மாவட்டத்தில் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சலை தடுக்கும் வகையில் கால் நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் முன்எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி, கோவை, பொள்ளாச்சி, சூலூர், தொண்டாமுத்தூர், போளுவாம்பட்டி, தேவராயபுரம் உள்ளிட்ட 39 இடங்களில் உள்ள பன்றி பண்ணைகளில் கால்நடை பராமரிப்புத்துறை டாக்டர்கள் நேரடியாக சென்று ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். முன் எச்சரிக்கையாக, பன்றிகளின் எச்சங்கள், கழிவு மாதிரிகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கோவை கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பெருமாள்சாமி கூறியதாவது:

    கோவை மாவட்டத்தில் 39 பன்றி பண்ணைகள் உள்ளன. இதில், 3 ஆயிரத்து 687 பன்றிகள் உள்ளன. தற்போது வரை எந்த பன்றிகளுக்கும் ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை.

    இந்த ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் என்பது பன்றிகளுக்கு மட்டுமே பரவும். பன்றிகளின் மூலமாக மனிதர்களுக்கு பரவாது. இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டால் பன்றிகள் உயிரிழக்க நேரிடும்.

    தற்போது, பண்ணைகளில் ஆய்வு செய்யப்பட்டு மாதிரிகள் சேரிகரிக்கப்பட்டு உள்ளன.

    பன்றிகள் திடீர் இறப்பு இருந்தால் உடனடியாக தகவல் அளிக்க பண்ணை உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், பண்ணையை சுத்தமாக பராமரிக்க வேண்டும், கிருமி நாசினி தெளிக்க வேண்டும், வெளியாட்களை பண்ணைக்குள் அனுமதிக்க வேண்டாம், ஓட்டல் கழிவு உணவுகளை பன்றிக்கு அளிக்க கூடாது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    தொடர்ந்து பன்றி பண்ணைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தவிர, சென்னையில் இருந்து இது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவை பின்பற்றப்பட்டு வருகிறது. வனத்துறை அதிகாரிகளிடம் வனத்தில் காட்டுப்பன்றிகள் இறப்பு தொடர்பாக தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட் டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×