search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
    X

    மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

    • காப்பாற்ற முயன்ற தாய் படுகாயம்
    • கம்பத்திற்கு உதவியாக பொருத்தப்பட்டிருந்த ஸ்டே கம்பியை பிடித்தபோது பரிதாபம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பென்னாத்தூர் அருகே உள்ள அல்லிவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு (வயது 50), விவசாயி. இவரது மனைவி செந்தாமரை (43). தம்பதியினரின் மகன்கள் அஜித்குமார் (24), விஜயகுமார் (22).

    அஜித்குமார் ராணுவத்தில் வேலை செய்து வருகிறார். விஜயகுமார் என்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

    அஜித்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டுக்கு வந்தார். விடுமுறை முடிந்து நேற்று பணிக்கு திரும்பி செல்ல தயாரானார்.

    இந்த நிலையில் அவரது தம்பி விஜயகுமார் மாட்டு கொட்டகையில் இருந்த சானியை நிலத்திற்கு எடுத்துச் சென்றார். அப்போது அங்கிருந்து மின்கம்பத்திற்கு உதவியாக பொருத்தப்பட்டிருந்த ஸ்டே கம்பியை பிடித்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததால், விஜயகுமார் துடித்தார். இதனைப் பார்த்து அவரது தாய் செந்தாமரை ஓடி சென்று, மகனைக் காப்பாற்ற கீழே தள்ளிவிட்டார்.

    அப்போது செந்தாமரை மீது மின்சாரம் பாய்ந்தது. படுகாயம் அடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் விஜயகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். செந்தாமரை தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×