search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டெறும்புகள் கடித்ததில் கட்டை விரல் பாதிப்பு
    X

    கட்டெறும்புகள் கடித்ததில் கட்டை விரல் பாதிப்பு

    • கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்
    • கடலை மிட்டாய் கம்பெனியில் இருந்து வருகிறது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.

    சலவன்பேட்டை சாது கார மடத் தெருவை சேர்ந்த ஜெயபால் என்பவர் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது பக்கத்து வீட்டில் கடலை பர்பி, கடலை மிட்டாய், பொரி உருண்டை உள்ளிட்ட குழந்தைகளுக்கான தின்பண்டங்கள் தயாரித்து வருகின்றனர்.

    இந்த திண்பண்டங்களில் மிகப்பெரிய கட்டெறும்புகள் மொய்த்து வருகிறது.

    அந்த கம்பெனியிலிருந்து எங்கள் வீட்டிற்குள் கட்டெறும்புகள் மற்றும் எலிகள் அதிக அளவில் வந்து தூக்கத்தை கலைக்கிறது.

    கட்டெறும்பு கடித்ததில் எனது கை கட்டைவிரல் பாதிக்கப்பட்டுள்ளது.

    எங்கள் வீடு முழுவதும் நாளுக்கு நாள் கட்டெறும்பு பெருகிக்கொண்டே வருகிறது. அங்கிருந்து வெளிவரும் புகை கண் எரிச்சலை ஏற்படுத்துகிறது. என்னுடைய தாயார் ஆஸ்துமா நோயால் அவதிப்படுகிறார்.

    எனக்கும் சர்க்கரை, ரத்த அழுத்த நோய் உள்ளது. பக்கத்து வீட்டில் மிட்டாய் கம்பெனி இருப்பதால் நாங்கள் மிகவும் அவதிப்படுகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    நூதன புகார்

    மேலும் கட்டெறும்புகளால் தனது விரல் பாதிக்கப்பட்டதாக கூறி அதிகாரியிடம் விரலை காண்பித்தார்.

    இந்த நூதன புகாரால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    கே.வி.குப்பம் அருகே உள்ள மேல் காவனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். அதில் எங்கள் பகுதியில் 88 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கி அதில் வீடுகள் கட்டி வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு முன்னாள் முதல்அமைச்சர் கருணாநிதி பேரில் கலைஞர் நகர் என்று பெயர் வைக்க வேண்டும்.

    இதற்கு ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே கலைஞர் நகர் என்று பெயர் பலகைவைக்க அனுமதி வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    மிரட்டல்

    ஊசூர் அடுத்த தெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவர் அளித்த மனுவில்,

    `எனது மகன் கடன் வாங்கியதால் கும்பல் ஒன்று என்னையும், எனது மனைவியையும் மிரட்டி வருகின்றனர்.

    இதனால் நானும், என் மனைவியும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×