search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஐ.டி. ஊழியர் வீட்டில் திருடியவர் கைது
    X

    ஐ.டி. ஊழியர் வீட்டில் திருடியவர் கைது

    • வங்கி லாக்கரில் வைத்திருந்த 50 பவுன் நகை மீட்பு
    • போலீசார் வழக்குப்பதிவு

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடியில் ஐ.டி. ஊழியர் வீட்டில் திருடிய உறவினர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலையில் வங்கி லாக்கரில் வைத்திருந்த 50 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.

    வேலூர் தொரப்பாடி ராம்சேட்நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 42), ஐ.டி. ஊழியர். இவருடைய மனைவி மோகனப்பிரியா (40), அரசுப்பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு மகதி என்ற மகள் உள்ளார். பாலாஜி தனது தாயார் உஷாராணி மற்றும் மனைவி, மகளுடன் அடுக்குமாடி வீட்டில் வசித்து வருகிறார்.

    பாலாஜி கடந்த 3-ந் தேதி திருப்பதிக்கும், தாயார் திருவண்ணாமலை மாவட்டம் கடலாடியில் உள்ள கோவிலுக்கும், மனைவி, மகள் மூஞ்சூர்பட்டில் நடந்த கோவில் திருவிழாவிற்கும் சென்றனர்.

    உஷாராணி சாமி தரிசனம் செய்துவிட்டு மாலை வீடு திரும்பினார். வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோவை திறந்து அதில் வைத்திருந்த 50 பவுன் நகைகளை மர்ம கும்பல் திருடி மிளகாய்பொடியை தூவி விட்டு சென்றிருந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த பாகாயம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உஷாராணி மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    தனிப்படை போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில், பாலாஜியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான குடிநீர் சுத்திகரிக்கும் எந்திரம் விற்பனை, பழுது பார்க்கும் வெங்கடேஷ் (40) என்பவர் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், பாலாஜி வீட்டின் பீரோவில் இருந்து 50 பவுன் நகையை திருடியதும், அவற்றை திருவண்ணாமலையில் உள்ள தனியார் வங்கி லாக்கரில் வைத்திருப்பதும், வேலை சரியாக இல்லாததால் உறவினர்கள் தன்னை மதிக்கவில்லை என்று திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வெங்கடேஷை கைது செய்தனர்.

    அதைத்தொடர்ந்து திருவண்ணாமலையில் உள்ள தனியார் வங்கி லாக்கரில் வைத்திருந்த 50 பவுன் நகையை மீட்டனர்.

    Next Story
    ×