பழக்கடை உரிமையாளர், ஊழியருக்கு கத்தி வெட்டு

இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது போலீசார் விசாரணை
பழக்கடை உரிமையாளர், ஊழியருக்கு கத்தி வெட்டு
Published on

வேலூர்:

வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (36). இவர் கணியம்பாடி டோல்கேட் அருகேயுள்ள வல்லம் பகுதியில் 24 மணி நேரமும் செயல்படும் டீக்கடையுடன் கூடிய பழக்கடையை நடத்தி வருகிறார்.

இவரது கடையில் கணியம்பாடி அடுத்த சின்னபாலம்பாக்கம் பகுதியை சேர்ந்த குமரன்(23) என்பவர் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பழக்கடைக்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், குமரன் மற்றும் செல்வகுமாரிடம் ஜூஸ் கேட்டுள்ளனர்.

அப்போது, 4 பேர் கும்பல் சத்தம்போட்டு பேசியுள்ளனர். இரவு நேரம் என்பதால் சத்தம்போடதே என்று கடை உரிமையாளர் செல்வகுமார் கூறியுள்ளார். இதில் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது 4 பேர் கொண்ட கும்பல், குமரன் மற்றும் கடை உரிமையாளர் செல்வகுமார் ஆகியோரை சரமாரியாக தாக்கினர்.

கத்தி வெட்டு

மேலும் பழங்களை வெட்ட பயன்படுத்தக்கூடிய கத்தியை கொண்டு இருவரையும் கை உள்ளிட்ட இடங்களில் வெட்டி விட்டு மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

இதில், குமரன் மற்றும் செல்வகுமார் ஆகியோர் ரத்த காயங்களுடன் சரிந்தனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த, புகாரின் பேரில் வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காமிராக்களின் பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினர்.

அதில் 2 பேரையும் கத்தியால் வெட்டியது ஆரணி குன்னத்தூர் பகுதியை சேர்ந்த கோபி (28), வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மதன் மற்றும் மகேஷ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கோபியை கைது செய்த போலீசார், தப்பியோடிய மதன் மற்றும் மகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com