search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் விடிய விடிய நடந்த மயானக் கொள்ளை திருவிழா
    X

    வேலூரில் மயானக்கொள்ளை விழாவையொட்டி தேர் பவனி வந்த காட்சி.

    வேலூரில் விடிய விடிய நடந்த மயானக் கொள்ளை திருவிழா

    • சாமி வேடமணிந்த பக்தர்கள் பரவசம்
    • பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

    வேலூர்:

    வேலூரில் நேற்று மயானக் கொள்ளை திருவிழா நடந்தது.விழாவையொட்டி வேலூர் சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், சத்துவாச்சாரி, விருதம்பட்டு மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அங்காளபரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்றனர். பல இடங்களில் சாமியை சப்பரத்தில் வைத்து எடுத்து சென்றனர்.

    ஊர்வலத்தின் முன்னே பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் கடவுள் போன்று வேடமிட்டு சென்றனர்.

    அவர்களில் பலர் காளியம்மன் போல வேடமிட்டு சென்றதும், கையில் சூலாயுதம் ஏந்திச்சென்றதும் தத்ரூபமாக இருந்தது.

    மேலும் ஊர்வலத்தில் சில பெண்கள் சாமி ஆடியபடி கோழி, ஆடுகளை வாயில் கவ்வியபடி சென்றனர். சில பக்தர்கள் எலும்பு துண்டுகளை கவ்வியபடியும், ஆட்டுக்குடலை மாலையாக அணிந்த படியும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

    ஒரு சில இடங்களில் நடந்த ஊர்வலத்தை வெளிநாட்டினர் புகைப்படம் எடுத்தனர். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச்சென்று ஆங்காங்குள்ள மயானத்தை அடைந்தது. வேலூர்- காட்பாடியை சேர்ந்த பக்தர்கள் முத்துமண்டபம் அருகே உள்ள பாலாற்றங்கரைக்கு சாமியுடன் ஊர்வலமாக சென்றனர்.

    அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடந்தது. பக்தர்கள் தங்கள் முன்னோர் சமாதிகளுக்கு சென்று கும்பிட்டனர். அம்மனை தரிசனம் செய்த பக்தர்கள் பின்னர் உப்பு, மிளகு, சுண்டல், கொழுக்கட்டை போன்றவற்றை சூறையிட்டு நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். வழக்கத்தை விட இந்த ஆண்டு மயான கொள்ளை திருவிழாவில் அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று மதியம் முதல் இன்று அதிகாலை வரை பாலாற்றங்கரையில் மயான கொள்ளை திருவிழா தொடர்ந்து நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி வேலூரில் விடிய விடிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    Next Story
    ×