என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை
- தலைமை ஆசிரியர் தொல்லை
- பரபரப்பு புகார்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சியம்மன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி. அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வந்த இவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
இவரது மனைவி நாகேஸ்வரி (வயது 56 )குடியாத்தம் நெல்லூர் பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தையல் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவர்களது மகன் விக்னேஷ் பொறியியல் பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
ஆசிரியை நாகேஸ்வரி நேற்று மாலையில் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர் நாகேஸ்வரியின் மகன் விக்னேஷ் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
குடியாத்தம் நெல்லூர் பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தையல் ஆசிரியை நாகேஸ்வரியை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆசிரியராக பணி செய்ய விடாமல் பள்ளி நூலகத்தில் காலை முதல் மாலை வரை உட்கார வைத்து வேலை வாங்கியதால் மிகவும் மன வேதனையில் இருந்துள்ளார்.
மேலும் தலைமை ஆசிரியை அனைவரும் முன் ஒருமையில் பேசி வந்ததாகவும் பல்வேறு வேலைகள் கொடுத்து அலைக்கழித்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலால் உடல் பாதிக்கப்பட்ட ஆசிரியை நாகேஸ்வரி 12 நாள் மருத்துவ விடுப்பு எடுத்தார்.
நேற்று முன்தினம் காலையில் மருத்துவ விடுப்பு முடிந்து உடல் தகுதி சான்று பெற்று பள்ளிக்கு சென்றார். தலைமை ஆசிரியையிடம் பணியில் சேர கேட்டபோது ஒரு மணி நேரம் நிற்கவைத்து நாகேஸ்வரியை பல்வேறு வகையில் தொல்லை கொடுத்துள்ளார்.
உடல் தகுதி சான்றிதழை நிராகரித்து அனுப்பிவிட்டார். அதனால் வீட்டுக்கு வந்து மன உளைச்சலில் இருந்துள்ளார். அதைத் தொடர்ந்து நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக குடியாத்தம் டி.எஸ்.பி. ராமமூர்த்தி மேற்பார்வையில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






