என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் கண்டக்டர் மீது கொலை வெறி தாக்குதல்
- வேலூர் புதிய பஸ் நிலையத்தில் மோதல்
- தனியார் பஸ் புரோக்கர், டிரைவர் மீது புகார்
வேலூர்:
திருப்பத்தூர் அரசு போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வருபவர் விமலன்( வயது 35). இவர் கடந்த 16-ந் தேதி சென்னையில் இருந்து திருப்பத்தூர் செல்லும் அரசு பஸ்ஸில் பணியில் இருந்தார்.
மதியம் பஸ் வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தது.அப்போது அவர்களுக்கு முன்னால் புறப்பட்டு செல்ல வேண்டிய தனியார் பஸ்சில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.
மேலும் அரசு பஸ்சில் ஏற வந்த பயணிகளையும் தனியார் பஸ் புரோக்கர்கள் கையை பிடித்து இழுத்து தனியார் பஸ்சுக்கு வருமாறு அழைத்தனர்.
இதனை விமலன் தட்டிக் கேட்டார். அப்போது ஆத்திரமடைந்த தனியார் பஸ் புரோக்கர் மற்றும் டிரைவர் சேர்ந்து விமலனை தாக்கினர்.அங்கிருந்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
பஸ் நிலையத்திற்கு வெளியே அரசு பஸ்சை மடக்கிய தனியார் பஸ் ஊழியர்கள் விமலனை பாட்டிலால் குத்த முயன்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து விமலன் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் இன்று புகார் அளித்தார்.
அதில் தனியார் பஸ் புரோக்கர் மற்றும் டிரைவர் கண்டக்டர் சேர்ந்து என்னை கொலை செய்ய முயன்றனர். மேலும் பணி செய்ய விடாமல் தடுத்தனர்.பயணிகள் தலையிட்டதால் நான் உயிர் பிழைத்தேன்.
என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வேலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






