search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் உள்பட 4 மாவட்டங்களில் 3,902 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
    X

    வேலூர் உள்பட 4 மாவட்டங்களில் 3,902 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

    • ரூ.100 முதல் விற்பனைக்கு வைத்துள்ளனர்
    • 1008 சிலைகள் அமைக்க இந்து முன்னனி ஏற்பாடு

    வேலூர்:

    இந்துக்களின் முதல் கடவுளாக வணங்கப்படும் விநாயகரின் சதுர்த்தி விழா, இன்று கொண்டாடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. களிமண்ணால் செய்யபட்ட விநாயகர் சிலைகள் ரூ.100 முதல் விற்பனைக்கு வைத்துள்ளனர்.

    வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான விநாயகர் சிலை, குடைகள், வேர்க்கடலை, சோளம், கம்பு, வாழை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர். இதனால் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்ட தொடங்கிவிட்டது.

    வேலூர் மாவட்டத்தில் இந்து முன்னனி சார்பில் மட்டுமே 1500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யபட்டுள்ளது. வேலூர் மாநகரில் மட்டுமே 1008 சிலைகள் அமைக்க இந்து முன்னனி ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி இன்று அதிகாலை முதல் முழு முதற்கடவுளான விநாயகர் பெருமானுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து விநாயகர் சிலைகளுக்கு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. விநாயகருக்கு உகந்த பொருளான அருகம்புல், எருக்கன் பூ மாலை, கம்பு, சோளம், நவதானியம், கொழுக்கட்டை மற்றும் பழங்களை படையலிட்டு வழிபட்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி கடைவீதிகளில் களிமண் விநாயகர் சிலைகள், அருகம்புல், எருக்கன்பூ மாலை, குடை மற்றும் பழ வகைகளின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

    திருவண்ணாமலை மாவட் டத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் சுமார் 1,200 விநாயகர் சிலைகள் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டன.

    இதையடுத்து விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் பணி 3-ம் நாளான நாளை மறுதினம் 20-ந் தேதி முதல் நடைபெற உள்ளன. இதற்காக 7 நீர் நிலைகள் தேர்வு செய்யப்பட்டு சிலைகள் கரைக்கப்பட உள்ளது. போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் 749 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையிலான 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நாளை மறுநாள் 20-ந் தேதி வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, கந்திலி உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளும், அன்றைய மறுநாள் 21-ந் தேதி ஆம்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளது.

    வாணியம்பாடி பள்ளிப்பட்டு ஏரி, ஆம்பூர் ஆணை மடுகு தடுப்பணை, திருப்பத்தூர் ஆதியூர்ஏரி, நாட்ரம்பள்ளி கல்லுகுட்டை ஏரி ஆகிய 4 இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட ராணிப்பேட்டை உட்கோட்டத்தில் 252 இடங்களிலும், அரக்கோணம் உட்கோட்டத்தில் 211 இடங்களில் என மொத்தம் 463 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட போலீஸ் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்ட முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு கிரண்சுருதி தலைமையான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×